ராஜீவ் காந்தி தான் நம்பர் 1 ஊழல்வாதி... தன் மீது எந்த கறையும் இல்லை... பிரதமர் மோடி பேச்சு
லக்னோ: முதலமைச்சராக இருந்த போதும், பிரதமரான பின்னரும் தம் மீது எந்தக் கறையும் இல்லை என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் பதோஹியில் நடைபெற்ற பாஜக பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், முன்னாள் பிரதமர் ராஜீவின் வாழ்க்கை நம்பர் 1 ஊழல்வாதியாகவே முடிந்தது என கடுமையாக தாக்கி பேசினார். மேலும், வாரிசுகள் நன்றாக, தெளிவாக கேட்டுக் கொள்ளட்டும், இந்த மோடி தங்க தட்டிலோ, ராஜ குடும்பத்திலோ பிறக்கவில்லை என்றார்.
சவுதி அரேபியா சிறைகளில் உள்ள 850 இந்தியர்களை விடுவிக்குமாறு தாம் விடுத்த கோரிக்கையை ஏற்று, ரம்ஜான் மாதத்தில் அவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளதாக கூறினார்.
முத்தலாக் தடை விவகாரம் பற்றிப் பேசிய அவர் சில நாடுகளில் முத்தலாக் என்பதே கிடையாது எனக் குறிப்பிட்டார். இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சகோதரிகளுக்கும் அதே உரிமையை கொடுக்க விரும்புவதாக மோடி தெரிவித்தார். இதன் மூலம் எந்த ஒரு மத நம்பிக்கையையும் இழிவுபடுத்தவில்லை என்று குறிப்பிட்ட அவர், அரசியலமைப்பின் படியே செயல்படுவதாகவும் கூறினார்.
தமிழக மாணவர்கள் டெல்லி மாணவர்களின் உரிமையை பறிக்கிறார்கள்.. கெஜ்ரிவாலின் பரபர போன் கால்!
ஆணும், பெண்ணும் சமம் என அரசியலமைப்பு கூறுவதையும் அவர் சுட்டிக் காட்டினார். சர்ஜிகல் தாக்குதலை, மக்களவைத் தேர்தலோடு தொடர்புபடுத்துவதாக எதிர்க்கட்சிகள் மீது குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, நீண்ட காலம் முதலமைச்சராகவும், தற்போது பிரதமராகவும் உள்ள தம் மீது எந்தக் கறையும் இல்லை என்று தெரிவித்தார். உலக அரங்கில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியை, எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொள்ள மறுப்பதாகவும் மோடி குற்றம்சாட்டினார்.