கும்பமேளாவின் இறுதி நாளில் ராமர் கோவிலுக்கான கட்டுமானம் துவங்கும்.. சாமியார்கள் பரபர முடிவு!
உத்தர பிரதேசத்தில் நடக்கும் கும்பமேளாவின் இறுதி நாளில் ராமர் கோவிலுக்கான கட்டுமானம் தொடங்கப்படும் என்று இந்து சாமியார்கள் தெரிவித்துள்ளனர்.
லக்னோ: உத்தர பிரதேசத்தில் நடக்கும் கும்பமேளாவின் இறுதி நாளில் ராமர் கோவிலுக்கான கட்டுமானம் தொடங்கப்படும் என்று இந்து சாமியார்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக உத்தர பிரதேசத்தில் இந்து சாமியார்கள், அகோரிகள் கலந்து கொண்டு வழிபடும் கும்பமேளா சிறப்பாக நடந்து வருகிறது. இந்த கும்பமேளாவில் மொத்தம் 13 கோடி இந்து சாமியார்கள் கலந்து கொள்கிறார்கள்.
மார்ச் 4ம் தேதி வரை 55 நாட்கள் இந்த விழா நடக்கிறது. இந்தியா முழுக்க லட்சக்கணக்கான சாமியார்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
ராமர் கோவில்
இந்த விழாவில் ராமர் கோவிலை மையமாக வைத்து பெரிய பூஜை ஒன்றை அகோரிகள் நடத்தி வருகிறார்கள். கும்பமேளாவின் ஒரு பகுதியாக 11 லட்சம் தீபங்களை அகோரிகள் ஏற்ற இருக்கிறார்கள். ராமர் கோவில் கட்டுவதற்காக இந்த பூஜையை அவர்கள் செய்து வருகிறார்கள். தீபங்களை ஏற்றினால், ராமர் கோவில் கட்டுவதற்கான வழி பிறக்கும் என்று அகோரிகள் தெரிவித்துள்ளனர்.
பேட்டி அளித்தார்
இந்த நிலையில் இதுகுறித்து தற்போது அகதா பரிஷத் என்று இந்து அமைப்பின் தலைவரும் சாமியாருமான நரேந்திர கிரி பேட்டியளித்துள்ளார். அதில், கும்பமேளா வரை ராமர் கோவிலுக்காக நாங்கள் பூஜை செய்வோம். பல சிறப்பு பூஜைகளை ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று நாங்கள் செய்ய இருக்கிறோம். பல சாமியார்கள் சேர்ந்து இந்த பூஜையை செய்ய உள்ளோம்.
கும்பமேளா இறுதிநாள்
கும்பமேளாவின் இறுதிநாளில் நாங்கள் எல்லோரும் ஒன்று கூடுவோம். ஒன்றாக சேர்ந்து இறுதி பூஜை செய்வோம். கடைசி நாளின் அன்று இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி பின் கோவில் கட்ட போகிறோம். கும்பமேளாவில் கடைசி தினத்தன்று கோவில் கட்ட தொடங்குவோம்.
பாஜக செய்யாது
பாஜக ராமர் கோவில் தொடர்பாக இதுவரை எதுவும் செய்யவில்லை. இனியும் பாஜக இதில் எதுவும் செய்யாது. பாஜக தேர்தலுக்காக இதை அப்படியே இழுத்துச் செல்ல திட்டமிட்டு இருக்கிறார்கள். தேர்தல் முடிந்தாலும் பாஜகவினர் கோவில் கட்ட போவதில்லை. அதனால் நாங்கள் கோவில் கட்ட போகிறோம் என்று சாமியார்கள் எல்லோரும் ஒன்றாக தெரிவித்துள்ளனர்.