உ.பி.யில் அடுத்தடுத்து...மேலும் ஒரு பத்திரிகையாளர் சுட்டுப் படுகொலை- 4 பேர் கைது
லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் பாலியா மாவட்டத்தில் நேற்று இரவு மூத்த பத்திரிகையாளர் ரதன் சிங் (வயது 45) சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படுகொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி அருகே உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் கடந்த மாதம் 22-ந் தேதி விக்ரம் ஜோஷி என்ற பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். தமது இரு மகள்கள் முன்னிலையிலேயே மர்ம நபர்களால் விக்ரம் ஜோஷி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது உத்தரப்பிரதேசத்தின் பாலியா மாவட்டத்தில் நேற்று இரவு ரதன் சிங் என்ற மற்றொரு பத்திரிகையாளர் மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.. ரதன் சிங், இந்தி டிவி சேனல் ஒன்றில் பணியாற்றி வந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக தினேஷ் சிங், அரவிந்த்சிங், சுனீல் சிங் மற்றும் மோதி சிங் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போலீசார், பத்திரிகையாளர் ரதன்சிங்குக்கும் தினேஷ் சிங்குக்கும் நிலம் தொடர்பான தகராறு இருந்துள்ளது. இதில்தான் ரதன்சிங் சுட்டுக் கொல்லப்பட்டார் என தெரிவித்துள்ளனர்.
எனது அம்மா பள்ளியில் டீச்சர்... நான் நியூட்ரிஷியன் டீச்சர்... பிரியா ப்ரின்ஸ் ஓபன் டாக்..!
இதனிடையே சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ரதன்சிங் குடும்பத்துக்கு உத்தரப்பிரதேச மாநில அரசு ரூ10 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளது.