பாவம் அந்த பச்சை கிளி.. காவல் நிலையத்தில் கண்ணீருடன் காத்து கொண்டிருக்கிறது.. ஏன் எதற்காக??
கிளிக்காக இரண்டு குடும்பத்தினர் சண்டை போட்டுக் கொண்டனர்.
லக்னோ: ஒரு கிளிக்கு ரெண்டு பேர் சண்டை போட்டு வருகிறார்கள். ரெண்டு பேரிடமும் சிக்கிக் கொண்டு அந்த கிளியும் திருதிருவென விழித்து வருகிறது.
உத்திரபிரதேசம் ஹரித்வாரில் வசித்து வருபவர் ராஜ்வீர். இவருக்கு கிளி என்றால் ரொம்ப பிரியம். அதனால் ஒரு ஆசை ஆசையாக ஒரு கிளியை வாங்கி வளர்த்து வந்தார். அந்த கிளிக்கு பேசவும் பழக்கி கொடுத்தார்.
ஆனால் போன வருஷம் இந்த கிளி திடீரென காணாமல் போய்விட்டது. இதனால் ராஜ்வீர் பயங்கரமாக அப்செட் ஆகிவிட்டார்.
கிளியை தேடினார்
எங்கெங்கோ தன் கிளியை தேடி பார்த்தார். கிடைக்கவே இல்லை. அதனால் தெரிந்தவர்களிடம் எல்லாம் தன் கிளியை பார்த்தால் தகவல் தரும்படி சொல்லி கொண்டு வந்தார். ஒரு கட்டத்தில் தன் கிளி கிடைக்காது என்று முடிவுக்கும் வந்து விட்டார்.
பெயர் சொன்ன கிளி
இந்த நிலையில், ஒருநாள் தன் நண்பன் முஸ்கான் வீட்டுக்கு ராஜ்வீர் சென்றார். அப்போது, திடீரென தன் கிளி அந்த வீட்டில் இருப்பதை கண்டார். அந்த நேரம்பார்த்து, அந்த கிளி தன் ஓனரை பார்த்ததும், அவரது பெயர் சொல்லி அழைத்தது.
அது என் கிளி
கிளி தன் பெயரை சொன்னதும் ராஜ்வீருக்கு கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வந்துவிட்டது. உடனே முஸ்கானிடம், "என் கிளி இங்க எப்படி வந்தது? திரும்பவும் என்கிட்டயே கிளியை கொடுத்துவிடு" என்று கேட்டார். அதற்கு முஸ்கான், "கிளி அதுவா என்கிட்ட வந்து தஞ்சமடைந்தது. அதனால் எனக்குதான் சொந்தம், கிளியை தர முடியாது" என்று பதில் சொன்னார்.
விட்டுத் தரவில்லை
இப்படியே ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் முற்றி சண்டையே வந்துவிட்டது. இதனால் விஷயம் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றுவிட்டது. பிரம்புரி போலீசார் இரு தரப்பினரையும் கூப்பிட்டு பேச்சு வார்த்தை நடத்தினர். பிறகு சமாதானமும் செய்தனர். யாராவது ஒருவரை விட்டுத்தரும்படி சொன்னார்கள். ஆனாலும் இரு தரப்புமே கிளியை விட்டுத்தர தயாராக இல்லை. ஸ்டேஷன் போயும் சண்டையும் தீரவில்லை.
காத்திருக்கும் கிளி
அதனால், ரெண்டு தரப்பும் பேசி ஒரு சுமூக முடிவுக்கு வரும்வரை கிளியை தரப்போவதில்லை என்று போலீசார் சொல்லி அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார்கள். இப்போது அந்த கிளி எந்த ஓனர் வந்து தன்னை கூட்டிக் கொண்டு போக போகிறார் என தெரியாமல் போலீஸ் ஸ்டேஷனில் காத்து கொண்டிருக்கிறது.