சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்களில் வன்முறை- உ.பி. போலீஸ் புகாருக்கு பாப்புலர் பிரண்ட் மறுப்பு
லக்னோ: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களில் வன்முறையை தங்கள் அமைப்பினர் நடத்தியதாக உத்தரப்பிரதேச போலீசார் கூறிவரும் குற்றச்சாட்டுகளை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
உத்தப்பிரதேசத்தில்தான் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களில் அதிக அளவு வன்முறைகள் வெடித்தன, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலியாகினர்.
இதனைத் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோரை உ.பி. போலீஸ் அடையாளம் கண்டு கைது செய்துள்ளது. முன்னெச்சரிக்கையாக ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் வன்முறைகளில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர்தான் ஈடுபட்டனர்; ஆகையால் அந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உ.பி. அரசு கடிதம் அனுப்பியுள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுடன் தடை செய்யப்பட்ட சிமி அமைப்பினர் இணைந்து வன்முறைகளில் ஈடுபட்டனர் என்பது உ.பி. அரசின் குற்றச்சாட்டு.
குட் மார்க் வாங்கிய செயலாளர்கள்.. உற்சாகத்தில் இபிஎஸ்-ஓபிஎஸ் .. 2020ல் சிக்ஸர் அடிக்க அதிமுக பிளான்
ஆனால் இதனை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், நாடு முழுவதும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டங்கள் நடைபெறுகின்றன. அவை அனைத்துமே அமைதியாக நடைபெறுகின்றன. போராடும் மக்களின் உணர்வுகளை போலீசாரும் மதிக்கின்றனர்.
பாஜக ஆளும் மாநிலங்களில்தான் இப்போராட்டங்கள் ஒடுக்கப்படுகின்றன. உத்தரப்பிரதேச போலீசாரே வன்முறைகளை தூண்டிவிடுகின்றனர். ஆனால் இந்த வன்முறைகளுக்கு பாப்புலர் பிரண்ட்தான் என உத்தரப்பிரதேச போலீசார் கூறுவது கண்டனத்துக்குரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், உத்தரப்பிரதேச வன்முறைகளில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் பங்கு குறித்து சந்தேகிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.