நாட்டில் எவரும்... மதம் காரணமாக... பின்னுக்கு தள்ளப்பட மாட்டார்கள்... பிரதமர் மோடி பளிச் பேச்சு!
லக்னோ
லக்னோ: நாட்டில் மதம் காரணமாக யாரும் பின்னுக்குத் தள்ளப்படமாட்டார்கள் என்றும் இதுதான் அனைவருக்குமான வளர்ச்சியின் அடிப்படை எனவும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பள்ளி செல்லும் மாணவிகளுக்கு தனி கழிப்பறைகளை மத்திய அரசு கட்டியதால் முஸ்லிம் மாணவிகள் பள்ளிக்கல்வியை பாதியில் நிறுத்துவது பெருமளவு குறைந்தது என பிரதமர் மோடி கூறினார்.
ஒருவரின் மனதில் நாட்டு நலன்தான் முக்கியமாக இருக்க வேண்டும், தற்சார்பு இந்தியாவுக்காக நாம் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் மோடி தெரிவித்தார்.
ஜனவரியில் சிபிஎஸ்சி தேர்வு கிடையாது... ரமேஷ் பொக்ரியால் உறுதி
மோடி பங்கேற்பு
உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். மேலும் அவர் இந்த நிகழ்ச்சியின் நினைவாக ஒரு தபால் தலையையும் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-
அனைவருக்கும் வளர்ச்சி
நாட்டில் சாதி, இனம், மதம் என எந்த பாகுபாடின்றி, அனைத்து மக்களின் நலனுக்கு பணியாற்றுவதே என சர் சய்யத் கூறியதை நினைவுகூர்கிறேன். ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலமைப்பால் வழங்கப்பட்ட உரிமைகள் உறுதி செய்யப்படும்.ஒருவரின் மதம் காரணமாக யாரும் பின்னுக்கு தள்ளப்படமாட்டார்கள். இதுதான் அனைவருக்குமான வளர்ச்சியின் அடிப்படை.
அரசு புரிதல்
40 கோடி மக்களுக்கு எந்தவித பாகுபாடும் இன்றி வங்கி கணக்குகள் கொடுக்கப்பட்டன. 2 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்குஎந்தவித பாகுபாடின்றி கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. 8 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் கேஸ் இணைப்பு பெற்றுள்ளனர். சுமார் 50 கோடி மக்கள் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற்றுள்ளனர். நாட்டின் வளங்கள் ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தமானவை.இது அனைவருக்கும் கிடைக்க வேண்டும். இந்த புரிதலுடன்தான் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
முயற்சி தேவை
புதிய இந்தியாவின் தொலைநோக்கு தேசத்தின், சமூகத்தின் வளர்ச்சியை ஓர் அரசியல் கோணத்தில் பார்க்கக்கூடாது என்று கருதுகிறது. தவறாக வழிநடத்தும் பிரசாரத்துக்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டும், ஒருவரின் மனதில் நாட்டு நலன்தான் முக்கியமாக இருக்க வேண்டும். தற்சார்பு இந்தியாவுக்காக நாம் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.
புதிய சக்தி
கொரோனா தொற்று நேரத்தில் சமூகத்துக்கு அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் தனது மிகப்பெரிய பங்களிப்பு செய்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளில், உலகின் பல நாடுகளுடன், இந்தியாவின் உறவை வலுப்படுத்த அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் பணியாற்றியுள்ளது. உருது, அராபிக், மற்றும் பெர்சிய மொழிகளில் இங்கு செய்யப்பட்டுள்ள ஆராய்ச்சி, ஒட்டு மொத்த இஸ்லாமிய நாடுகளுடன், இந்தியாவுக்கு உள்ள கலாசார உறவுக்கு புதிய சக்தியை அளிக்கிறது.
முன்னேற்றம்
ஒரு காலத்தில் கழிவறைகள் பற்றாக்குறை காரணமாக, முஸ்லிம் மாணவிகள் கல்வியை பாதியில் நிறுத்துவது 70 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பள்ளி செல்லும் மாணவிகளுக்கு தனி கழிப்பறைகளை இந்த அரசு கட்டியது. தற்போது முஸ்லிம் மாணவிகள் பள்ளிக்கல்வியை பாதியில் நிறுத்துவது 30 சதவீதமாக குறைந்துள்ளது. முஸ்லிம் பெண்களின் கல்வி மற்றும் அவர்களின் மேம்பாட்டில் அரசு அதிக அக்கறை செலுத்துகிறது.
பாகுபாடு கூடாது
கடந்த 6 ஆண்டுகளில், சுமார் ஒரு கோடி முஸ்லிம் மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை இந்த அரசு வழங்கியுள்ளது. பாலின அடிப்படையில் எந்த பாகுபாடும் இருக்க கூடாது, ஒவ்வொருவருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும், முத்தலாக் முறையை முடிவுக்கு கொண்டு வந்து, நவீன முஸ்லிம் சமூகத்தை உருவாக்கும் முயற்சிகளை நாடு முன்னெடுத்தது. கல்வி, வேலைவாய்ப்பு அதிகாரம் பெற்ற பெண் ஒருவர், ஒவ்வொரு முடிவிலும், ஒவ்வொரு மட்டத்திலும், மற்றவர்களைபோல் சம அளவு பங்களிப்பை அளிக்கிறார்.
வழங்குகிறது
உயர் கல்வியில் தனது சமகால பாடத்திட்டங்கள் மூலம் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் பலரை கவர்ந்துள்ளது. ஒரு படிப்பில் பல முறை சேருவது, வெளியேறுவது என புதிய கல்வி கொள்கையில் உள்ள நடைமுறை, கல்வி தொடர்பாக மாணவர்கள் முடிவெடுப்பதை எளிதாக்கும். ஒட்டுமொத்த படிப்புக்கான கட்டணம் பற்றி கவலைப்படாமல், மாணவர்கள் முடிவெடுக்கும் சுதந்திரத்தை இது வழங்குகிறது.உயர் கல்வியில் இடங்களையும், மாணவர்களின் பதிவையும் அதிகரிக்க அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது என்றார் பிரதமர் மோடி.