வெளிநாட்டிற்கு செல்ல நேரமிருக்கு.. விவசாயிகளின் கண்ணீரை துடைக்க நேரமில்லையா? பிரியங்கா காந்தி கேள்வி
லக்னோ: பிரதமர் நரேந்திர மோடிக்கு வெளிநாடுகளுக்குச் செல்ல நேரம் இருக்கிறது, ஆனால் தலைநகரில் போராடும் விவசாயிகளைச் சந்தித்து அவர்களின் கண்ணீரைத் துடைக்க நேரமில்லை என்று பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு நாடு முழுவதும் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதிலும் குறிப்பாகப் பஞ்சாப் பற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், இது வரை மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.
தொடரும் போராட்டம்
இந்நிலையில், இன்று உத்தரப் பிரதேசத்தின் முசாபர் நகரில் கிசான் பஞ்சாயத்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "தலைநகரில் 90 நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் குறைந்தது 215 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச எல்லைகள்
அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரம் மற்றும் நீர் நிறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டத்தை நடத்துகின்றனர். ஆனால் போராட்டம் நடைபெறும் டெல்லி எல்லைகளை மத்திய அரசு, சர்வதேச எல்லைகளைப் போல மாற்றியுள்ளது. நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்க ராணுவத்திற்கு ஆள்களை அனுப்பும் விவசாயிகளைப் பயங்கரவாதிகள் என்று அழைக்கிறது மத்திய அரசு" என்று விமர்சித்துள்ளார்.
கண்ணீரை துடைக்க நேரம் இல்லை
தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை தாக்கிப் பேசிய அவர், "பிரமதர் மோடி விவசாயிகளை தொழில்முறை போராட்டக்காரர்கள் என்று அழைத்து கேலி செய்கிறார். ராகேஷ் டிக்கைட் போன்ற விவசாயச் சங்க தலைவர்கள் அழும்போது, அதை வேடிக்கையானது என்று பிரதமர் கருதுகிறார். பிரதமருக்கு வெளிநாடுகளுக்குச் செல்ல நேரமிருக்கிறது. ஆனால் தலைநகரில் போராடும் விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களின் கண்ணீரை துடைக்க நேரம் இல்லை" என்று தாக்கு பேசினார்,
குறைந்தபட்ச ஆதரவு விலை
பிரதமர் மோடி தனது பெரிய கார்ப்பரேட் நண்பர்களுக்காக இந்த விவசாய சட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டிய பிரியங்கா காந்தி, இந்த விவசாய சட்டங்கள் மூலம் வரியில்லாத தனியார் மண்டிகள் ஏற்படுத்தப்படும் என்றும் இதனால் அரசாங்க மண்டிகள் மூடப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், இந்தச் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது இல்லாமல் போகும் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.