சீனா, பாகிஸ்தானுடனான யுத்தத்துக்கு பிரதமர் மோடி நாள் குறித்துவிட்டார்..உ.பி. பாஜக தலைவர் பரபர பேச்சு
லக்னோ: சீனா, பாகிஸ்தானுடனான யுத்தம் எப்போது என்பதை பிரதமர் மோடி முடிவு செய்துவிட்டார் என உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லையில் சீனா தொடர்ந்து ஊடுருவல் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனை நமது ராணுவ வீரர்கள் முறியடித்து வருகின்றனர். அத்துடன் சீனாவுடனான எல்லைகளில் ராணுவம் முழு தயார் நிலையில் இருக்கிறது.
அண்மைக்காலமாக எல்லைப் பகுதிகளில் சீனாவும் ராணுவத்தை பெருமளவு குவித்து வருகிறது. இருநாடுகளிடையேயான பேச்சுவார்த்தைகளில் எல்லைகளில் ராணுவ குவிப்பை திரும்பப் பெறுவது என்பது முக்கியமான பிரச்சனையாகவும் பேசப்பட்டு வருகிறது.
எல்ஜேபி மட்டும் ஆட்சிக்கு வந்தா... நிதிஷ்குமாருக்கு ஜெயிலுதான்.. எச்சரிக்கும் சிராக் பாஸ்வான்
இந்த நிலையில் உத்தரப்பிரதேச பாரதிய ஜனதா மாநில தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் பேசியதாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அதில், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவை ரத்து செய்தது, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது போன்ற நடவடிக்கைகளைப் போல பாகிஸ்தான், சீனாவுடனான யுத்தம் குறித்தும் பிரதமர் மோடி முடிவு செய்துவிட்டார். யுத்தத்துக்கான நாளை கூட மோடி தீர்மானித்துவிட்டார் என கூறியிருக்கிறார்.
பாஜக எம்.எல்.ஏ. சஞ்சய் யாதவ் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்தான் ஸ்வதந்திர தேவ் சிங் இப்படி பேசியுள்ளார். மேலும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் தொண்டர்களை பயங்கரவாதிகளாகவும் அவர் சித்தரித்திருக்கிறார். இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், சிறப்புதான்.. நமது இந்திய நிலப்பகுதியை யார் ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்பதை கூட மோடி சொல்வதில்லை. அப்படியான பெயர் தெரியாத எதிரியுடன் யுத்தத்துக்கு மோடி தயாராகிவிட்டார் என குறிப்பிட்டிருக்கிறார்.