9 மணிநேர திகில்.. முடிவுக்குவந்த சினிமா பாணி மிரட்டல்.. 23 சிறுவர்கள் மீட்பு.. குற்றவாளி சுட்டு கொலை
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் கொலைக் குற்றவாளி ஒருவர் பிறந்தநாள் கொண்டாட்டம் என கூறி தனது வீட்டுக்கு வரவழைத்த 23 குழந்தைகளையும் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டு மிரட்டல் விடுத்தார். நள்ளிரவில் போலீஸாருடன் ஏற்பட்ட சண்டையின் போது அந்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம், ஃபருக்காபாத் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் பாதம். அந்த நபர் கொலை குற்றவாளி ஆவார். அவர் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்தது தெரியவந்தது.
இந்த நிலையில் இவர் அங்குள்ள குழந்தைகளை தனது வீட்டுக்கு மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அழைத்துள்ளார். அப்போது அவரது வீட்டுக்கு நேற்று மாலை 3 மணிக்கு 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், சில பெண்கள் வந்தனர்.
புதிய ஊழிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் தோல்வி.. இன்றும் நாளையும் வங்கிகள் வேலைநிறுத்தம்
போன்
இதையடுத்து அந்த நபர் அவர்கள் அனைவரையும் அடைத்து வைத்து பூட்டினார். இதுகுறித்து தகவலறிந்த அங்கிருந்த அக்கம்பக்கத்தார் போலீஸாருக்கு போன் செய்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் மாலை 5 மணிக்கு சுபாஷின் வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது ஒரு போலீஸ்காரர் சுபாஷிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்தார்.
கதவு உடைப்பு
ஆனால் அவர் வீட்டிலிருந்தபடியே துப்பாக்கியால் சுட்டார். இதில் போலீஸ்காரருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் 7 மணி நேரம் கழித்து 6 வயது சிறுமியை மட்டும் பால்கனி வழியாக அனுப்பி வைத்தார். பின்னர் நள்ளிரவு 1 மணிக்கு அங்கிருந்த பொதுமக்களும் போலீஸாரும் சுபாஷின் வீட்டு கதவை உடைக்க முயற்சித்தனர். அப்போது அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
பத்திரமாக மீட்பு
தற்காப்புக்காக போலீஸாரும் பதிலடி கொடுத்தனர். அந்த சமயம் வெளியே வந்த சுபாஷின் மனைவியை அந்த ஊர்காரர்கள் பிடித்து அடித்தனர். அவர் போலீஸாரால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதனிடையே இரு தரப்புக்கு ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் நள்ளிரவு 1.30 மணிக்கு சுபாஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். இதை போலீஸார் உறுதி செய்தனர். 23 குழந்தைகளை பிடித்து வைத்துக் கொண்டு ஆட்டம் காண்பித்த குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டு குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
|
சினிமா பாணி
இதை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். இதையடுத்து சாமர்த்தியமாக குழந்தைகளை மீட்ட உ.பி. போலீஸ் குழுவுக்கு ரூ 10 லட்சம் சன்மானத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மேலும் அனைத்து போலீஸாருக்கும் சான்றிதழும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஏதோ சினிமா பாணியில் குழந்தைகளை பிடித்து வைத்து கொண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.