அடடா.. நேத்துதான் வாழ்த்தினார் முலாயம்.. அதுக்குள்ள போஸ்ட் போட்டு கலக்கிட்டாங்களே பாஜகவினர்
முலாயம் சிங்கை பாராட்டி உ.பி. பாஜகவினர் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
லக்னோ: மோடிக்கு வாழ்த்து சொல்லி முழுசா ஒரு நாள் கூட முடியல. அதுக்குள்ள ஒரு பெரிய சைஸ் போஸ்டர் அடிச்சி முலாயமுக்கு நன்றிக்கடன் செலுத்தி உள்ளனர் உ.பி.பாஜக தொண்டர்கள்!
பாஜக அரசை இந்த முறை எப்படியாவது வீட்டுக்கு அனுப்பியே ஆக வேண்டும் என்று ஒரு அணி திரண்டு வருகிறது. அந்த அணியில் படு சுறுசுறுப்பாக இருப்பவர் அகிலேஷ் யாதவ்தான்.
அதற்காகத்தான் தனக்கு எப்பவுமே கொஞ்சமும் ஒத்துவராத மாயாவதியையே அனுசரித்து கொண்டு பாஜகவுக்கு எதிரான செயல்களை முன்னெடுத்து வருகிறார்.
வாழ்த்துகிறேன்
இந்த நிலையில்தான், மக்களவையின் கடைசி நாளான நேற்று சமாஜ்வாடி கட்சி தலைவரும் அகிலேஷ் யாதவின் அப்பாவுமான முலாயம் சிங் யாதவ் மோடியை பாராட்டி பேசினார். "நீங்கள் மீண்டும் பிரதமராக நான் வாழ்த்துகிறேன்"என்று சொன்னதுமே அருகிலிருந்த சோனியா காந்தி முகம் வாடிவிட்டது.
பாஜக தொண்டர்கள்
எதற்காக முலாயம் இப்படி ஒரு வார்த்தையை மோடியை பார்த்து சொன்னார் என்றும், எதற்காக ஆஹா ஓஹோவென புகழ்ந்தார் என்றும் காங்கிரசில் மட்டுமல்ல, பாஜக தரப்பே ஒரு செகண்ட் ஆடிப்போய்விட்டது. ஆனால் அதற்கு நன்றி தெரிவித்து உ.பியில் பாஜக தொண்டர்கள் வாழ்த்து போஸ்டர்களை ஆங்காங்கே ஒட்டிவிட்டார்கள்.
பிரதான சாலைகள்
எதிர்க்கட்சிகளுக்கு முலாயமின் இந்த பேச்சு ஆச்சரியம், குழப்பம், சந்தேகம் என பல உணர்வை தந்து கொண்டிருந்தாலும், பொழுது விடிவதற்குள் இன்று காலை உபியின் பிரதான சாலைகள், தெருக்களில் முலாயமுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர்கள் தென்பட்டன.
125 கோடி மக்கள்
"முலாயம் சிங் யாதவ் அவர்களுக்கு நன்றி. 125 கோடி மக்களின் விருப்பம் என்னவென்பதை மக்களவையில் நீங்கள் வெளிப்படுத்தியுள்ளீர்கள்'' என்று அதில் வரிகள் இடம் பெற்றுள்ளன.