உ.பி.,யில் பிரியங்கா காந்தி காலண்டர் விநியோகம் படுஜோர்! ராகுல் முகத்தை தேடும் தொண்டர்கள்
உத்தரபிரதேசம்: 2022 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, உ.பி.யில் ஒவ்வொரு வீட்டிற்கும் பிரியங்கா காந்தி புகைப்படங்கள் அச்சிடப்பட்ட காலண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
உத்தரபிரதேசத்தில் எதிர்வரும் 2022ம் ஆண்டு தேர்தலை கணக்கில் கொண்டு, அங்கு பிரியங்கா காந்தியை முன்னிலைப்படுத்தும் விதமாக அவரது படங்கள் நிறைந்த காலண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
உ.பி., மாநிலம் முழுவதும் பரவலாக ஒவ்வொரு நகரம் முதல் கிராமங்கள் வரை வீடு வீடாக சென்று காங்கிரஸ் தொண்டர்கள், பிரியங்கா காந்தி காலண்டர்களை மக்களுக்கு கொடுக்கின்றனர்.
முதற்கட்டமாக, 10 லட்சம் பிரதிகள் உ.பி., மாநில காங்கிரஸ் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 12 பக்கங்கள் கொண்ட இந்த காலண்டரின் ஒவ்வொரு பக்கங்களிலும் விதவிதமான போஸ் கொண்ட பிரியங்காவின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
சோன்பத்ராவில் ஆதிவாசி பெண்களுடன் பிரியங்கா உரையாடுவது, அமேதியில் பெண்களைச் சந்திப்பது, உஜ்ஜைனி மஹாகாளி கோவிலில் பிரார்த்தனை செய்வது, லக்னோவில் காந்தி ஜெயந்தி விழாவில் பங்கேற்பது, வாரணாசியில் ரவிதாஸ் ஜெயந்தியில் பங்கேற்றது, ஹத்ராஸ் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தது, தேர்தல் பேரணியில் உரையாற்றியது, அசாம்கரில் குழந்தைகளைச் சந்தித்தது, ஹரியானா ரோட்ஷோவில் பங்கேற்றது என வெரைட்டி கலந்து பிரியங்காவின் படங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
2022 சட்டப்பேரவை தேர்தலில், பிரியங்கா காந்தி தலைமையில் உ.பி.யில் களமிறங்க காங்கிரஸ் திட்டமிட்டிருப்பதால், கட்சியை மக்களிடையே பலப்படுத்த இந்த காலண்டர் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது காங்கிரஸின் பொதுச் செயலாளர்களில் ஒருவராக உள்ள பிரியங்கா காந்தியை உ.பி., முதல்வராக்கவே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பாலக்கோடு தாக்குதல் பற்றி 5 பேருக்குத்தானே தெரியும்.. அர்ணாப்புக்கு சொன்னது யார்? ராகுல் பொளேர்
உட்கட்சி பூசல் காரணமாக அகில இந்திய காங்கிரஸ் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகிய பிறகும், காங்கிரஸின் தேசிய முகமாக பிரியங்கா காந்தியை அடையாளப்படுத்தும் முயற்சிகள் அரங்கேறி வருகின்றன.
மத்தியில் இரண்டாவது முறையாக பாஜக ஆட்சி பிடித்ததற்கு காங்கிரசின் பலவீனமும் முக்கிய காரணம் என்றால் அது மறுப்பதற்கில்லை. ஆகவே, இப்போதே கட்சியை பலப்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் அடுத்தடுத்து வியூகங்களை வகுத்து வருகிறது. அதன் தொடக்க புள்ளியாகவே உ.பி.யில் பிரியங்காவை முதல்வராக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.