அது பாட்டுக்கு ஒருபக்கம் நடக்கும்.. நான் பாட்டுக்கு என் பணியில் கவனம் செலுத்துகிறேன்.. பிரியங்கா
லக்னோ: கணவர் மீதான அமலாக்கத் துறை விசாரணை பாட்டுக்கு ஒரு பக்கம் நடக்கட்டும். நான் என் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையினர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வத்ராவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேச மாநில பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்ட பிரியங்கா, கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில் ராஜஸ்தானில் நில மோசடி செய்ததாக நேற்றைய தினம் அதன் தலைநகர் ஜெய்ப்பூரில் விசாரணை நடைபெற்றது. அவருடன் அவரது தாய் மௌரீன் வத்ராவும் உடனிருந்தார். ராபர்ட் வத்ராவிடம் 8 மணிநேரத்துக்கும் மேலாக அமலாக்கத் துறையினர் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அமலாக்கத் துறை
இதனிடையே கட்சி அலுவலகத்தில் 16 மணிநேரத்துக்கும் மேல் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தை நடத்திவிட்டு வெளியே வந்த அவரிடம், வத்ராவிடம் அமலாக்கத் துறை நடத்தும் விசாரணை உங்கள் பணிகளை பாதிக்கிறதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
கட்சியினர் ஆர்வம்
அதற்கு பிரியங்கா கூறுகையில் விசாரணை பாட்டுக்கு ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்கும். நான் பாட்டுக்கு என் வேலைகளில் கவனம் செலுத்துகிறேன். கட்சியினரின் ஆர்வத்தை பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது.
ஆலோசனைகள்
எனக்காக பல நாட்களாக அவர்கள் காத்திருந்தனர். அதற்கு அவர்களுக்கு நன்றி. கட்சி குறித்து நான் மேலும் மேலும் கற்று வருகிறேன். தேர்தலில் மற்றவர்களை வீழ்த்துவது குறித்து கட்சியினரிடம் ஆலோசனைகளை பெற்றேன்.
பிரியங்கா காந்தி
உத்தரப்பிரதேச மாநில லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெருவாரியான தொகுதிகளை வெல்ல வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம் என்றார் பிரியங்கா காந்தி. நேற்று முன் தினம் பிரியங்கா காந்தி மிகப் பெரிய பேரணியை நடத்தினார்.