பிரியங்கா காந்தி...உ.பி. சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறாரா? முதல்வர் வேட்பாளராக அறிவிக்கிறதா காங்?
லக்னோ: உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் புதிய திருப்பமாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடக் கூடும் என தெரிகிறது. பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிட்டால் அவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உத்தரப்பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் பாஜக அரசுக்கு எதிராக அதிருப்தி அலை இருக்கிறது; ஆனாலும் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்கின்றன கருத்து கணிப்புகள்.
உ.பி. சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றால் சமாஜ்வாதி கட்சியே பிரதான கட்சியாக இருக்கும்; 4-வது இடம்தான் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும்; அதுவும் சிங்கிள் டிஜிட்டில்தான் இடங்கள் கிடைக்கும் என்கின்றன அந்த கருத்து கணிப்புகள்.
எது நடக்கக் கூடாதுனு வைகோ நினைத்தாரோ அது நடந்துவிட்டது.. விலகியது ஏன்?.. மதிமுக நிர்வாகி விளக்கம்
உ.பி. களத்தில் காங். நிலைமை
உ.பி.யில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து 30 ஆண்டுகளாகிவிட்டன. நேரு குடும்பத்துக்கு என இருந்த பாரம்பரியமான வாக்கு வங்கிகள் இப்போது இல்லை. லோக்சபா தேர்தலில் அமேதி தொகுதியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோல்வியைத்தான் தழுவியிருந்தார். இதனால் உ.பி. தேர்தல் களம் காங்கிரஸுக்கு நிச்சயம் சாதகமாக இருக்கப் போவதில்லை என்பதே பொதுவாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து.
உயிர்ப்பிக்க போராடும் பிரியங்கா
ஆனால் இம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை உயிர்ப்பித்தாக வேண்டும் என போராடி வருகிறார் பிரியங்கா. உ.பி.யில் அரசுக்கு எதிராக எந்த ஒரு நிகழ்வும் நடந்தாலும் பிரியங்கா காந்தி வருகை தருவதும் அவரை போலீசார் தடுத்து காவலில் வைப்பதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. லக்கிம்பூரில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட போது அரசியல் ரீதியாக பிரியங்கா கையாண்ட விதம் பலரையும் திரும்பிப் பார்க்கவும் வைத்திருக்கிறது.
பிரியங்காவின் அதிரடி அரசியல்
லக்கிம்பூர் படுகொலை சம்பவத்தின் போது கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க பிரியங்கா காந்தி புறப்பட்டார். ஆனால் அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது போலீசாருடன் பிரியங்கா காந்தி மல்லுக்கட்டிய விதத்தை அவரது பாட்டி இந்திரா காந்தியுடன் பலரும் ஒப்பிட்டு கருத்து தெரிவித்திருந்தனர். அத்துடன் அப்போது பிரியங்கா எதிர்க்கட்சிகளான சமாஜ்வாதி கட்சியையும் பகுஜன் சமாஜ் கட்சியையும் விளாசினார். அதாவது உத்தரப்பிரதேசத்தில் எதிர்க்கட்சிகள் எங்கே இருக்கின்றன? களத்தில் நிற்பது காங்கிரஸ் மட்டும்தான். மாயாவதியை ட்விட்டரில்தான் பார்க்க முடிகிறது. என்னதான் நீங்கள் சமாஜ்வாதி கட்சிக்கும் மாயாவதிக்கும் ஓட்டுப் போட்டாலும் கூட நாளை உங்களுக்கு ஒரு பிரச்சனை எனில் காங்கிரஸ்தான் வீதிக்கு வந்து நிற்கும் என செம அதிரடியாக பேசியிருந்தார்.
காங். இலக்கு என்ன?
காங்கிரஸின் தற்போதைய பிரதான இலக்கு உ.பி.யில் கணிசமான அல்லது கவுரவமான இடங்களைப் பெறுவது என்பதாகவே உள்ளது. இந்நிலையில் உ.பி. தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு வழங்கும் என பிரியங்கா காந்தி அறிவித்தார். அப்போது நீங்கள் தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்ற கேள்வியை பிரியங்கா காந்தி நிராகரிக்கவில்லை. இதற்கு பதிலாக, இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்று மட்டும் மழுப்பலாகவே கூறினார்.
போட்டியிடுகிறார் பிரியங்கா?
அதேபோல் உ.பி. காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக உங்களை அறிவிக்க வாய்ப்புள்ளதாக என்ற கேள்விக்கும், காங்கிரஸ் மேலிடம் யாரை வேண்டுமானாலும் முதல்வர் வேட்பாளராக நிறுத்தலாம். எதுவும் நடக்கலாம் என்று பட்டும் படாமலும் பதில் கூறினார். அத்துடன் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு தற்போதைய நிலையில் நான் எதனையும் கூற இயலாது என்றார். (முதல்வர் யோகி ஆதித்யநாத், உ.பி. சட்ட மேலவை உறுப்பினராக உள்ளார். சட்டசபை தேர்தலில் போட்டியிடுவாரா என்பது இதுவரை அறிவிக்கப்படவும் இல்லை). பிரியங்கா காந்தியின் இத்தகைய பூடகமான பதில்களே அவர் தேர்தலில் போட்டியிடக் கூடும் என்பதை உறுதி செய்வதாக இருக்கிறது என்கின்றனர் அம்மாநில மூத்த பத்திரிகையாளர்கள். பிரியங்கா காந்தி சட்டசபை தேர்தல் களத்துக்கு வந்தால் நிச்சயம் காங்கிரஸ் கட்சி பீனிக்ஸ் பறவை போல உயிர்த்தெழும் என்கிற நம்பிக்கையையும் வெளிப்படுத்துகின்றனர் உ.பி. காங்கிரஸ் நிர்வாகிகள்.