மோடிக்கு எதிராக வாரணாசியில் போட்டியிடாதது ஏன்? முதல்முறையாக மனம் திறந்த பிரியங்கா காந்தி
லக்னோ: பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசியில் போட்டியிடாதது ஏன் என்ற கேள்விக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விளக்கம் அளித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தங்கையும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி, பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயார் என அறிவித்தது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அனுமதித்தால் போட்டியிடுவேன் என பிரியங்கா காந்தி கூறினார். இதனால் பாஜகவினர் மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியினரும் பிரியங்காவின் பேட்டியை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
என்ன ராகுல் காந்தி இந்திய குடிமகன் கிடையாதா? பிரியங்கா காந்தியின் மாஸ் ரெஸ்பான்ஸ்!
இந்நிலையில் வாரணாசியில் வேட்பு மனுதாக்கலுக்கு நாள்கள் நெருங்கிய நிலையில் பிரியங்காவை போட்டியிட அனுமதிப்பது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இறுதியில் ராகுலிடம் பிரியங்கா பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட வேண்டாம் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வாரணாசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அஜய் ராய் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அவர் மனுதாக்கல் செய்தார்.
இந்நிலையில் வாரணாசியில் போட்டியிடாதது ஏன் என்ற கேள்விக்கு பதில அளித்த பிரியங்கா காந்தி, "எங்கள் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் சக காங்கிரஸ் நிர்வாகிகள் எனக்கு காங்கிரஸ் போட்டியிடும் 41 தொகுதிகளிலும் முழுபொறுப்பு இருப்பதாக கூறி என்னிடம் வேண்டுகோள் விடுத்தனர். அதனால் நான் ஒரே ஒரு தொகுதியில் கவனம் செலுத்தினால் வேட்பாளர்கள் ஏமாற்றம் அடைவார்கள் எனபதை உணர்ந்தேன். அதனால் வாரணாசியில் போட்டியிடவில்லை" என்றார்.