விபத்தில் சிக்கிய பெண்ணை கண்டதும் வாகனத்தை நிறுத்தி, முதலுதவி செய்த பிரியங்கா காந்தி!
லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலத்தில் விபத்தில் சிக்கிய பெண்ணை கண்டதும் வாகனத்தை நிறுத்தி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி , முதலுதவி செய்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் அருண் வால்மீகி என்ற இளைஞர், ஆக்ராவில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில், ஆதாரங்களைச் சேகரித்து வைக்கும் கட்டிடத்தில் துப்புரவு பணியாளராக இருந்து வந்தார்.
அந்த குடோனில் 25 லட்சம் ரூபாய் திடீரென திருடு போனது... இந்த பணம் திருடு போனது தொடர்பாக துப்புரவு தொழிலாளி அருண் வால்மீகியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
சசிகலா மீது அதிமுக போலீசில் புகார்..எடப்பாடி பழனிசாமி சொன்ன சில மணி நேரத்தில்.. அரங்கேறிய காட்சிகள்
போலீசார் மீது புகார்
விசாரணையில், பணம் திருடியதை அவர் ஒப்புக் கொண்டார்.. மேலும் திருடிய பணத்தை ஒரு குடோனில் பதுக்கி வைத்துள்ளதாகவும் சொன்னார். அதன்பேரில் போலீசாரும் சென்று அங்கிருந்த 15 லட்சம் ரூபாயை மீட்டனர். ஆனால், திடீரென அந்த துப்புரவு தொழிலாளிக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. அதனால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனிடையே, போலீசார் தான் அவரை அடித்து கொன்றுவிட்டதாக குடும்பத்தினர் புகார் தந்தனர்.
ஆக்ரா பயணம்
இதுகுறித்து விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.இப்படிப்பட்ட சூழலில், மர்மமாக இறந்துபோன துப்புரவு தொழிலாளியின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, இன்று பிற்பகல் ஆக்ரா நோக்கி சென்றார். அப்போது அவரை லக்னோ - ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலையின் முதல் டோல்கேட்டில் போலீசார் தடுத்து நிறுத்தியதுடன் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது... போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்தார்.
Recommended Video
பயப்படுவது ஏன்
இது தொடர்பாக பிரியங்கா காந்தி கூறும் போது "கட்சி ஆபீஸ் தவிர, நான் எங்கே போனாலும், எந்த இடத்துக்கு போனாலும் ஏன் இப்படி தடுத்து நிறுத்துறீங்க? இதனால் பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது.. ஏன் இந்த அரசாங்கம் இப்படி எதற்கு பயப்படுகிறது?.. மக்களுக்கு நடக்கும் அநீதியை எல்லாம் பார்த்துவிட்டு, சொகுசு விடுதியில் உட்கார்ந்திருக்க முடியுமா" என்று கேள்வி எழுப்பினார்.
விபத்தில் பெண்
இதனிடையே சர்ச்சைகளை தவிர்க்கும் வகையில் விடுதலை செய்த உத்தரப்பிரதேச போலீசார், பிரியங்கா காந்தியை ஆக்ரா செல்ல அனுமதித்தனர். அவர் காரில் சென்று கொண்டிருந்தார். வழியில் கோமதி நகரில் ஒரு பெண் விபத்தில் சிக்கினார். இதை பார்த்து பதறிப்போன பிரியங்கா காந்தி உடனே காரை நிறுத்த சொன்னார்.அத்துடன் அந்த பெண்ணுக்கு முதலுதவி அளித்தார். அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க கோரினார். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பிரியங்காவின் மனிதநேயத்தை பாருங்கள் என காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அந்த வீடியோவை வைரல் செய்து வருகிறார்கள். இதனிடையே ஆக்ரா சென்ற பிரியங்கா காந்தி, காவலரின் விசாரணையில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினரை இன்று மாலை சந்தித்தார். அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு சென்றார்.