டெல்லியில் ஜீன்ஸ்.. உ.பியில் புடவை.. பிரியங்கா காந்தியை விமர்சித்த பாஜக எம்பி, எழுந்தது சர்ச்சை
லக்னோ: பிரியங்கா காந்தி டெல்லியில் இருக்கும்போது ஜீன்ஸ் அணிகிறார்.. ஆனால் உத்தரப்பிரதேசம் வரும்போது புடவை அணிந்து பொட்டு வைத்து கொள்கிறார் என்று பாஜக எம்பி ஹரிஷ் துவேதி விமர்சித்துள்ளார்.
காங்கிரசில் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் பிரியங்கா காந்தியின் வரவால் உத்தரப்பிரதேச தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து லோக்சபா தொகுதிகளையும் கைப்பற்றவே அவர் நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
அவரது அரசியல், நடவடிக்கைகள் குறித்து பாஜக தரப்பில் இருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந் நிலையில், பாஜகவின் எம்பியான ஹரிஷ் துவேதி, பிரியங்கா காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் கூறியதாவது:ராகுல் காந்தி அரசியலில் தோல்வியடைந்துவிட்டார். இப்போது வந்திருக்கும் பிரியங்காவும் தோல்வியடைவார். அவரின் சொத்துகள் மீது உலகம் முழுவதிலும் ரைடுகள் வந்தவண்ணம் இருக்கிறது.
ஆனால் இது குறித்து அவருக்கு எந்த கவலையும் இல்லை.பிரியங்கா டெல்லியில் இருக்கும்போது ஜீன்ஸ் அணிகிறார்.. ஆனால் உத்தரப்பிரதேசம் வரும் போதோ புடவை அணிந்து பொட்டு வைத்து கொள்கிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த விமர்சனத்துக்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இது குறித்து பேசிய அம்மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பாபர், தன் சொந்த அம்மா தங்கையை கூட மதிக்கத் தெரியாதவர்களிடம் மரியாதையை எதிர்பார்ப்பதில் எந்த பயனும் இல்லை என்று கூறியுள்ளார்.