ஹத்ராஸ்: நாடே பற்றி எரிகிறது.. பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி இப்படி பேசுகிறாரே .. புதிய சர்ச்சை!
ஹத்ராஸ்: நீதி கேட்டு காங்கிரஸ் போராடவில்லை: ஸ்மிருதி இரானி
லக்னோ: "ஹத்ராஸில் பெண் மரணம் குறித்து, சிறப்பு விசாரணைக் குழு அறிக்கை மட்டும், வெளியாகி விட்டால் உபி முதல்வர் யோகி, நிச்சயம் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பார்.. இந்த எதிர்க்கட்சிகளின் செயல்பாடு எல்லாம் அரசியல் ஆதாயம் தானே தவிர நீதிக்காக அல்ல" என்று அமைச்சர் ஸ்மிரிதி ராணி பேசிய பேச்சு இன்னும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 வயதான இளம் தலித் பெண் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவமும், அதையொட்டி அவரது சடலத்தை எரித்த விதமும், இறுதியில் ஆஸ்பத்திரி தரப்பின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் என அடுத்தடுத்த அதிர்ச்சிகள் வெளியாகி வருகின்றன. இளம்பெண் உயிரிழந்து 3 நாட்கள் ஆகியும் இதன் பாதிப்பும் தாக்கமும் மக்களுக்கு இன்னும் விலகவில்லை.
இதை கண்டித்து போராட்டங்கள் வெடித்தன.. அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரமுகர்கள் வரை இதற்கு நியாயம் கேட்டனர்.. ட்விட்டரிலும் ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகின.. எதிர்க்கட்சிகள் இந்த போராட்டத்தை கையில் எடுத்து வருகிறது.
அமைச்சர்
இப்படிப்பட்ட சூழலில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி ஏன் அமைதியாக இருக்கிறார்? என்ற கேள்வி சோஷியல் மீடியாவில் வெளியாகிய வண்ணம் இருந்தன.. ஆனால், இந்த சூழலில், ஐநாவின் பெண்களுக்கான மாநாட்டில் இந்தியா சார்பில் ஸ்மிருதி இரானி பங்கேற்றிருந்தார்.
பாலின சமத்துவம்
அங்கு அவர் பேசுகையில், "இந்தியாவில், பாலின சமத்துவம், பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.. பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு, குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் போன்றவைகளுக்கு கடுமையான தண்டனைகள் கிடைக்கும் வகையில் இந்தியாவில் சட்டம் இயற்றப்பட்டுள்ளன... எனவே, இதன்மூலம் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
பெண் பாதுகாப்பு
ஸ்மிருதி ராணி இப்படி பேசியது மேலும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. நடந்து கொண்டிருக்கும் சூழலுக்கும், அவர் அங்கு பேசியதற்கும் உள்ள முரண்பாட்டினை வைத்து மேலும் விமர்சிக்கப்பட்டார்.. காரணம், இது முதல் பாலியல் பலாத்கார மரணம் இல்லை.. கடந்த சில மாதங்களாகவே உபியில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.. தொடர்ந்து பலாத்கார வன்முறைகள் நடந்து வருகின்றன.. இதை எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தியவாறே வந்த நிலையில், ஸ்மிருதி, நாட்டின் பெருமைகளை இவ்வாறு பேசியதுதான் மேலும் எதிர்ப்பை சம்பாதித்தது.
குடும்பத்தினர்
இறந்து போன பெண்களுக்கு ஒரு தீர்வு கிடைக்காமல், பெண்களை இழந்த குடும்பத்தினர் தவித்து கொண்டிருக்கும் நிலையில் அமைச்சர் எப்படி இப்படி என்றும் கேள்விகள் எழுந்தபடியே உள்ளன.. இந்த உபியை சேர்ந்தவர்தானே? அதிலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்துகொண்டு, ஹத்ராஸ் சம்பவத்துக்கு எதிர்ப்பைகூட சொல்லாமல் இப்படி மவுனம் காப்பது சரிதானா? என்றும் எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பி கொண்டே இருக்கிறார்கள்.
அரசியல்வாதிகள்
இதற்கு பிறகுதான், குற்றவாளிகள் கண்டிப்பாக தூக்கிலிடப்படுவர் என்று ஸ்மிருதி தனது கண்டனத்தை தெரிவித்தார்.. எனினும் ஒரு பெண் அரசியல்வாதியாக இருப்பவர், பெண்களை பாதுகாக்கும் வகையில் சட்டங்களை இன்னும் கடுமையாக்க முன்வர வேண்டும் என்று ட்விட்டர்வாசிகளும் கோரிக்கை விடுத்தபடியே உள்ளனர்.
முதல்வர் யோகி
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஸ்மிருதி இரானி, முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பு விசாரணைக்குழு அமைத்துள்ளார்... ஹத்தராஸ் போலீஸ் உயரதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று எனக்கு தகவல் வந்துள்ளது... சிறப்பு விசாரணைக் குழு அறிக்கை வெளியாகி விட்டால் யோகி நிச்சயம் கடும் நடவடிக்கைகளை எடுப்பார்.. காங்கிரஸ் என்ன மாதிரியான அரசியல் செய்கிறது என்பதை மக்கள் நன்றாக அறிந்துதான் 2019-ல் பாஜகவுக்கு வாக்களித்தனர்.
நிர்பயா நிதி
ஜனநாயகத்தில் எதை எதிர்த்து யார் வேண்டுமானாலும் போராடலாம்.. அதை நாம் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் ஹத்ராஸில் இவர்களது செயல்பாடு முழுக்க முழுக்க அரசியல் ஆதாயம் தானே தவிர நீதிக்காக கிடையாது.. மோடி அரசின் கீழ்தான் நிர்பயா நிதியிலிருந்து மாநிலங்களுக்கு ரூ.9,000 கோடி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் மகளிருக்கென தனி போலீஸ் பிரிவு மோடி ஆட்சியின் வரலாற்றுத் தருணமாகும். மகளிர் உதவி எண் மூலம் சுமார் 55 லட்சம் பெண்கள் உதவி பெற்றுள்ளனர்" என்று தெரிவித்தார் ஸ்மிருதி இரானி.