உ.பி. தேர்தல் முடிவுகள் கணிப்புகளை தவிடுபொடியாக்கும்: சொல்வது சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல்
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகள் யாரும் எதிர்பாராததாகவும் கருத்து கணிப்புகளை தவிடுபொடியாக்கும் என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.
உ.பி. சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆளும் பாஜக ஆட்சியை தக்க மத்திய அமைச்சர்கள் பட்டாளத்தையே களமிறக்கி உள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து வருகின்றனர்.
தமிழ்மகன் உசேன் நியமனம்.. ஒரே கல்லில் 3 மாங்காய் அடித்த எடப்பாடி பழனிச்சாமி.. சரியான வியூகம்
உ.பி. தேர்தலில் பாஜகவுக்கு சவாலாக இருக்கும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியும் காங்கிரஸும் தனித்தே போட்டியிடுகின்றன. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் அக்கட்சி உ.பி. தேர்தலை எதிர்கொள்கிறது.
களத்தில் பூபேஷ் பாகல்
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் மூத்த பார்வையாளராக சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் நியமிக்கப்பட்டுள்ளார். உ.பி. தேர்தல் நிலவரம் தொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பூபேஷ் பாகல் கூறியதாவது: உ.பி.யில் ஆளும் பாஜகவுக்கு எதிராக கடுமையாக போராடி வருவது காங்கிரஸ் கட்சி மட்டுமே. சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் பாஜகவுக்கு சாதகமாக சமரசம் செய்து கொண்டிருக்கின்றன.
உ.பி.யில் சர்வாதிகாரம்
உ.பி.யில் பாஜக ஆட்சியின் கீழ் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். உ.பி. பாஜக அரசைப் பற்றி ஒற்றை வரியில் சொல்வதானால் அங்கே சர்வாதிகாரம்தான் தலைவிரித்தாடுகிறது. மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மீது விவசாயிகள் நம்பிக்கை இழந்துவிட்டனர். பாஜகவை எந்த வகையிலும் விவசாயிகள் நம்புவதற்கு தயாராக இல்லை. மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்துவிட்டதாலேயே விவசாயிகளுக்கான அரசாக மோடி அரசு மாறிவிடாது. உ.பி. உள்ளிட்ட சில மாநில சட்டசபைத் தேர்தல்களை கவனத்தில் கொண்டுதான் விவசாய சட்டங்களை பாஜக அரசு ரத்து செய்திருக்கிறது. ஜனநாயகத்தின் வலிமையை போராட்டத்தின் மூலம் பாஜகவுக்கு விவசாயிகள் புரிய வைத்திருக்கின்றனர்.
பிரியங்காவால் தலைகீழ் மாற்றங்கள்
கடந்த 32 ஆண்டுகாலமாக உ.பி.யில் பாஜக ஆட்சியில் இல்லை. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் பிரியங்கா காந்தி தலைமையிலான காங்கிரஸ் பல்வேறு மாற்றங்களை உ.பி.யில் கொண்டு வந்திருக்கிறது. உ.பி.யில் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவதில் பிரியங்கா காந்தி படுதீவிரமாக செயல்பட்டு வருகிறார். மக்களின் பிரச்சனைகளுக்காக துணிச்சலுடன் பிரியங்கா காந்தி போராடி வருகிறார். உ.பி. தேர்தல் முடிவுகள் யாரும் எதிர்பாராத வகையில் இருக்கும். அத்தனை கருத்து கணிப்புகளும் தலைகீழாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை.
ராகுல் தலைமைதான் சரி
மத்தியில் ஆளும் பிரதமர் மோடி அரசுக்கு எதிராக போராடுகிற ஒரே தலைவராக ராகுல் காந்திதான் இருக்கிறார். கொரோனா, லாக்டவுன், சீனா விவகாரம் என அத்தனை பிரச்சனைகளிலும் மோடி அரசுக்கு சவாலாக இருப்பவர் ராகுல் காந்திதான். ராகுல் காந்தியின் தலைமைதான் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது தேவையாக உள்ளது. இவ்வாறு பூபேஷ் பாகல் கூறினார்.