மீண்டும் சூடாகும் அயோத்தி.. ராமர் கோவில் கட்டக் கோரி பேரணி.. இந்து அமைப்பினர் குவிகின்றனர்!
நாளை அயோத்தியில் பிரமாண்ட பேரணி நடைபெற உள்ளது.
லக்னோ: திரும்பவும் அயோத்தியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி இந்து அமைப்புகள் சார்பில் நடத்தப்படும் பேரணிக்காக 2 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அயோத்தி சட்ட சிக்கல்கள் காரணமாக ராமர் கோவில் கட்டப்படவில்லை. அதனால் உடனே கோவிலை கட்டி தர வேண்டும் என்றும், இதற்காக ஒரு அவசர சட்டத்தையும் கொண்டு வர வேண்டும் என்றும் கோரப்பட்டு வருகிறது.
இதனை விசுவ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா போன்ற இந்துத்துவா அமைப்புகள் நீண்ட காலமாகவே மத்திய மாநில அரசுகளிடம் வலியுறுத்தி வருகின்றன.
1 லட்சம் தொண்டர்கள்
தங்களது இதே கோரிக்கையை வலியுறுத்தி நாளை ஒரு பிரமாண்டமான பேரணியும் இந்த அமைப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பேரணியில் லட்சக்கணக்கான இந்துக்கள் கலந்து கொள்ள போவதாக கூறப்படுகிறது. இதற்காக காலையிலிருந்தே நிறைய பேர் அயோத்தியில் குவிய தொடங்கி விட்டார்கள். இப்பவே இந்த அமைப்புகள் மூலம் 1 லட்சம் தொண்டர்கள் வந்துள்ளார்களாம்.
குவியும் கூட்டம்
லாரி, பஸ், கார், ரயில் என்று ஒன்றையும் விடவில்லை இம்மக்கள். எல்லா வாகனங்களும் கூட்டம் நெருக்கி தள்ளுகிறது. இனி நாளைக்குள் எப்படியோ 2 லட்சம் பேர் வந்துவிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரமாண்ட பேரணியால் திரும்பவும் அயோத்தியில் ஒரு பதட்டமான சூழ்நிலை ஏற்பட துவங்கியுள்ளது.
144 தடை உத்தரவு
அதனால் அயோத்தியில் 144 தடை உத்தரவும் போடப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக செயல்பட்டு வருவது, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேதான். இவ்வளவு பெரிய ஏற்பாடும் அவரது முயற்சியால்தான் நடந்து வருகிறது.
போலீசார் குவிப்பு
நாளை காலை 11 மணிக்கு விசுவ இந்து பரிஷத் மூத்த தலைவர்களை உத்தவ் தாக்கரே நேரில் சந்தித்து பேச போகிறார். இந்த சந்திப்பு முடிந்ததும் பேரணி துவங்கி விடுமாம். பேரணி முடியும்வரை எந்தவித பிரச்சனையும், கலவரமும், நடந்துவிடக் கூடாது என்று கமாண்டோ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மூலை முடுக்குகளில் போலீசாரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.