ப்ளீஸ், வெள்ளி செங்கற்களை அனுப்பாதீங்க.. லாக்கரில் இடம் இல்லை.. ராமர் கோயில் டிரஸ்ட் வேண்டுகோள்
லக்னோ: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்திற்கு யாரும் வெள்ளி செங்கற்களை அனுப்ப வேண்டாம் என்று ராமர் கோயில் கட்டட டிரஸ்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்ட கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன் பின் கடந்தாண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோயில் கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த ராமர் கோில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான நிதியைத் திரட்டும் பணிகள் கடந்த ஜனவரி 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. அரசியல்வாதிகள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ராமர் கோயில் கட்டுமானத்திற்கு நன்கொடை அளித்து வருகின்றனர்.
வெள்ளி செங்கற்கள்
இந்நிலையில், கோயில் கட்டுமானத்திற்கு யாரும் வெள்ளி செங்கற்களை அனுப்ப வேண்டாம் என்று ராமர் கோயில் கட்டட டிரஸ்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது. வங்கி லாக்கர்கள் வெள்ளி செங்கற்களைச் சேமிக்க போதிய இடம் இல்லாததால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரை 400 கிலோ வெள்ளி செங்கற்கள் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளன.
பல கிலோ வெள்ளி செங்கற்கள்
இது குறித்து அயோத்தி ராமர் கோயில் கட்டட டிரஸ்ட் உறுப்பினர் அணில் மிஸ்ரா கூறுகையில், "கோயில் கட்டுமானத்தில் பயன்படுத்த நாடு முழுவதும் இருந்து மக்கள் வெள்ளி செங்கற்களை அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். இப்போது எங்களிடம் பல கிலோ வெள்ளி செங்கற்கள் உள்ளன, அவற்றை எப்படிப் பாதுகாப்பாகச் சேமிப்பில் வைப்பது என்பதைக் குறித்தே இப்போது தீவிரமாகச் சிந்தித்து வருகிறோம்.
பேங்க் லாக்கர்
இதன் காரணமாக பொதுமக்கள் இனிமேல் வெள்ளி செங்கற்களை நன்கொடையாக அளிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். வங்கி லாக்கர்கள் அனைத்தும் வெள்ளி செங்கற்களால் நிரம்பியுள்ளன. இந்தச் செங்கற்களைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கவே நாங்கள் கூடுதல் தொகையைச் செலவழிக்க வேண்டி உள்ளது" என்றார்.
நிதி வசூல்
இதுவரை ராமர் கோயில் கட்டுமானத்திற்கு சுமார் 1,600 கோடி ரூபாய் நிதி வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்களிடம் இருந்து நிதி வசூலிக்கும் பணிகளில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளதாக ராமர் கோயில் டிரஸ்ட் பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார். மேலும், அயோத்தி ராமர் கோயிலை 39 மாதங்களில் கட்டி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்,