அமேதியில் பயங்கரம்.. கும்பல்களால் முன்னாள் இந்திய ராணுவ கேப்டன் கொடூரமாக அடித்துக் கொலை
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் ராணுவ கேப்டன் மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அமேதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி அருகே கம்ருலி காவல் சரகம் கோடியன் கா புருவா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அமனுள்ளா (64). இவர் இந்திய ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். அமனுள்ளா தனது மனைவியுடன் கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு முன்னாள் ராணுவ அதிகாரி அமனுள்ளாவை சில மர்ம நபர்கள் வீடு புகுந்து கட்டைகளால் சரமாரியாக தாக்கி உள்ளனர். தலையிலேயே கொடூரமாக ஓங்கி ஓங்கி அடித்ததில் இரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பாக அமனுள்ளாவின் மகன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் அமனுள்ளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணை நடந்து வருவதாக ஏடிஎஸ்பி தயராம் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் ராணுவ அதிகாரி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.