ரயில் நிலையத்தில் வாழைப்பழம் விற்கக் கூடாதாம்..! எந்த ஊரில் எனக் கேட்கிறீர்களா..?
லக்னோ: லக்னோவில் உள்ள சார்பாக் ரயில் நிலையத்தில் வாழைப்பழம் விற்பனை செய்ய உள்ளூர் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
உத்தரப்பிரதேசம் தலைநகர் லக்னோவில் உள்ள சார்பாக் ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். லக்னோ நகரில் உள்ள இரண்டு ரயில் நிலையங்களில் சார்பாக் ரயில் நிலையம் பிரசித்தி பெற்றதாகும்.
இந்நிலையில் அங்குள்ள ஸ்டால்களில் வாழைப்பழம் விற்பனை செய்யக் கூடாது என உள்ளூர் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மீறி வாழைப்பழம் விற்கப்படுவது தெரியவந்தால் வியாபாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கக் நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வாழைப்பழம் விற்பனை செய்யப்படுவதால் அதை வாங்கி சாப்பிடுபவர்கள் தோல்களை ஆங்காங்கு தூக்கி எறிந்து விடுகின்றனர் எனவும், இதனால் ரயில் நிலையம் அசுத்தமாக காட்சியளிப்பதாகவும் விநோத காரணம் கூறப்படுகிறது.
வசதியில்லாதவர்களின் வயிற்றை நிறைக்கும் வாழைப்பழத்தை விற்கக்கூடாது என்பது ஏற்கத்தக்கதல்ல என்றும், இது குறித்து உள்ளூர் நிர்வாகமும், ரயில்வே அதிகாரிகளும் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பயணி ஆஷிஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 4 நாட்களாக வாழைப்பழம் விற்பனை செய்யாததால் பெரும் நஷ்டத்தை சந்திப்பதாக சார்பாக் ரயில் நிலையத்தில் குத்தகைக்கு கடை நடத்தும் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆப்பிள், மாதுளை என விலை உயர்ந்த பழங்களின் தோலினால் ரயில் நிலையத்தில் மாசு ஏற்படாதா என்றும், ஏழைகள் விரும்பி வாங்கும் பழத்திற்கு தடை விதித்திருப்பது எந்த வகையிலும் நியாயமில்லை என்றும் ஆதங்கப்படுகின்றனர்..