உபி தேர்தல்... பாஜகவை வீழ்த்த மாஸ்டர் பிளான்.. மம்தாவுடன் கை கோர்க்கும் அகிலேஷ் யாதவ்??
லக்னோ: மேற்கு வங்க தேர்தலில் பாஜகவை வீழ்த்திய திரிணாமுல் காங்கிரஸை பாராட்டியுள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், வரும் காலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னெடுக்கும் மாற்று அணியில் சேர வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார்.
அடுத்தாண்டு நாட்டில் மொத்தம் 7 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் பஞ்சாப் தவிர மற்ற 6 மாநிலங்களிலும் பாஜகவே ஆட்சியில் உள்ளது.
குறிப்பாக உத்தரப் பிரதேச தேர்தல் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. நாட்டில் மிகப் பெரிய மாநிலம் என்பதாலும், பிரதமர் மோடி மக்களவையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநிலம் என்பதால் அதன் மீது எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ளது.
அடேங்கப்பா.. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மனித தலைகள்! யோகியை அதிர வைத்த அகிலேஷ் யாதவ் பொதுக் கூட்டம்
உத்தரப் பிரதேச தேர்தல்
கடந்த 2017இல் உத்தரப் பிரதேசத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக மிகப் பெரியளவில் வென்றது. மொத்தமுள்ள 403 இடங்களில் 312 இடங்களைக் கைப்பற்றி அசுர வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது கடந்தாண்டு வரை பெரியளவில் அதிருப்திகள் இல்லாமல் இருந்தது. இருப்பினும், கொரோனா 2ஆம் அலையை மோசமாகக் கையாண்டது யோகி இமேஜை பாதித்தது. இதனால் கட்சியை மீண்டும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளை பாஜக எடுக்கத் தொடங்கியுள்ளது.
அகிலேஷ் யாதவ்
அதேபோல உத்தரப் பிரதேசத்தில் மற்ற எதிர்க்கட்சிகளும் தங்கள் பிரசாரங்களைத் தொடங்கியுள்ளன. உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி நகரில் சமாஜ்வாதி கட்சி சார்பில் நடத்தப்பட்ட மிகப் பெரிய பேரணியில் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் போதிய அகிலேஷ் யாதவ், "மேற்கு வங்கத்தில் பாஜகவை மம்தா படுதோல்வி அடையச் செய்தார். அதேபோல உத்தரப் பிரதேச மக்களும் பாஜகவைப் படுதோல்வி அடையச் செய்வார்கள்.
அக்கறை இல்லை
வரும் காலத்தில் மம்தா முன்னெடுக்கும் மாற்று அணியில் நாங்கள் சேர வாய்ப்புள்ளது. சரியான நேரம் வரும் போது அவர்களுடன் (திரிணாமுல் காங்கிரஸ்) பேச்சுவார்த்தை நடத்துவோம். உத்தரப் பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி பூர்வாஞ்சல் விரைவுச்சாலை திறந்து வைத்தார். ஆனால் இது எங்கள் ஆட்சியில் தொடங்கப்பட்ட ஒரு திட்டம். அதை எதோ பாஜக செய்தது போலக் கூறுகிறார்கள். எங்கள் ஆட்சியில் வெறும் 22 மாதங்களில் விரைவுச் சாலையை உருவாக்கினோம். ஆனால் பாஜக அதே வேலையை 4.5 ஆண்டுகளில் செய்துள்ளது. அவர்களுக்கு உ.பி. மக்கள் மீதெல்லாம் அக்கறை இல்லை. அதைத்தான் இது காட்டுகிறது" என்றும் அவர் கடுமையாகச் சாடினார்.
அகிலேஷ் யாதவ் பிளான்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள இதர பிராந்தியக் கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் அகிலேஷ் யாதவ் ஈடுபட்டுள்ளார். அதேபோல மேற்கு உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகளின் ஆதரவையும் பெற அவர் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறார். அதேபோல மேற்கு வங்க தேர்தலுக்குப் பிறகு திரிணாமுல் காங்கிரசும் சமாஜ்வாதி கட்சியும் அரசியல் களத்தில் நெருங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
காங்கிரஸ்
அதேபோல காங்கிரஸ் கட்சி குறித்துப் பேசிய அகிலேஷ் யாதவ், "காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை மக்கள் அவர்களை ஏற்கனவே நிராகரித்துவிட்டனர். வரும் தேர்தலில் அவர்கள் ஒரு இடத்திலும் வெல்ல முடியாது" என்று பதிலடி கொடுத்தார். முன்னதாக அகிலேஷ் யாதவ் தேர்தல் என்றால் மட்டும் அரசியல் செய்வதாகவும் லக்கிம்பூர் போராட்டத்தின் போது அவர் எங்குப் போனார் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.