ராணுவத்தில் வேலை.. சீருடையுடன் பணியில் இருந்த இளைஞருக்கு 4 மாதம் கழித்து கிடைத்த ஷாக்!
லக்னோ: சீருடையுடன் பணியாற்றி விட்டு நான்கு மாதம் சம்பளமும் பெற்ற பிறகு இளைஞர் ஒருவருக்கு ராணுவத்தில் பணியே கிடைக்கவில்லை என்பதும்.. மோசடியில் சிக்கியிருப்பதும் தெரியவந்து உள்ளது. ரூ.16 லட்சம் கொடுத்து ஏமாற்றம் அடைந்த நபர் காவல்துறையில் புகார் அளித்த பிறகு இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தால் இளைஞர்கள் திணறி வருகின்றனர். அதுவும் அரசு வேலைகளுக்கெல்லாம் கடும் போட்டி நிலவுகிறது.
சில நூறு பணியிடங்களுக்கே லட்சக்கணக்கான இளைஞர்கள் விண்ணப்பிக்கின்றனர்.
அரசு வேலை
இத்தகைய போட்டிகளுக்கு மத்தியில் சில மோசடி கும்பல்கள் பணம் கிடைத்தால் அரசு வேலை வாங்கி விடலாம் என்று ஆசை வலையை விரிக்கின்றனர். வேலை எதுவும் கிடைக்காமல் கஷ்டப்படும் இளைஞர்களும், எப்படியாவது அரசு வேலைக்கு சென்று விட வேண்டும் என்ற ஆர்வத்தில் பணம் கொடுத்து ஏமாந்து விடுகின்றனர். பணத்தை இழந்தது விட்டு வேலையும் கிடைக்காத விரக்தியில் காவல் நிலையத்தில் புகார் அளிப்பது போன்ற செய்திகள் எல்லாம் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
ராணுவத்தில் பணி
இதேபோலத்தான் உத்தர பிரதேசத்திலும் ஒரு வேலை மோசடி நடந்துள்ளது. ஆனால், இங்கு சற்று வித்தியாசமான முறையில் மோசடி நடந்துள்ளது. 4 மாதமாக 12 ஆயிரம் சம்பளமும் வாங்கிய பிறகுதான் ராணுவத்தில் தன்னை பணியில் சேர்க்கவில்லை என்ற விவரம் மனோஜ்குமாருக்கு தெரியவந்துள்ளது. இப்படியும் மோசடி நடக்குமா? என்று யோசிக்கும் வகையில் புது டெக்னிக்கில் இந்த மோசடி நடைபெற்று இருக்கிறது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
ரூ.16 லட்சத்தை புரட்டி கொடுத்துள்ளார்
உத்தர பிரதேசத்தை சேர்ந்த மனோஜ் குமார் என்ற இளைஞருக்கு ராகுல் சிங் என்பவர் அறிமுகம் ஆகியிருக்கிறார். மனோஜ் குமார் வேலை இன்றி கஷ்டப்படுவதை அறிந்த ராகுல் சிங், தான் ராணுவத்தில் உயர் அதிகாரியாக இருப்பதாகவும் பணம் கொடுத்தால் வேலை வாங்கி கொடுப்பதாகவும் கூறியிருக்கிறார். இதை நம்பி மனோஜ் குமாரும் ரூ.16 லட்சத்தை புரட்டி கொடுத்து இருக்கிறார்.
மனோஜ் குமாருக்கு சந்தேகம்
இதையடுத்து மனோஜ்குமாரிடம் பணி கிடைத்து விட்டதாகவும் அடையாள அட்டை சீருடையும் வழங்கியிருக்கிறார். தனக்கு ராணுவத்தில் வேலை கிடைத்து விட்டதாக நம்பி மனோஜ் குமாரும் மிடுக்காக சீருடைகளை அணிந்து கொண்டு ராணுவ முகாமிற்கு வெளியே துப்பாக்கியை வைத்துக்கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதும் ராகுல் சிங் சொல்லும் வேலைகளை செய்து கொடுப்பதுமாக இருந்துள்ளார். ஆனால் மனோஜ்குமாருக்கு தனது வேலை குறித்து சந்தேகங்கள் எழுந்து இருக்கிறது.
ராகுல்சிங் மிரட்டல் விடுத்துள்ளார்
இதனால், சில ராணுவ வீரர்களுடன் இது குறித்து பேசியிருக்கிறார். அப்போது மனோஜ் குமாரின் அடையாள அட்டையை பார்த்த ராணுவ வீரர்கள் இது போலி என தெரிவித்து உள்ளனர். அப்போதுதான் உண்மை விவரம் மனோஜ்குமாருக்கு தெரியவந்து இருக்கிறது. இதையடுத்து தன்னிடம் மோசடி செய்த ராகுல் சிங்கிடம் பேசியிருக்கிறார். ஆனால், ராகுல்சிங் மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து காவல் நிலையத்தில் மனோஜ் குமார் புகார் அளித்து இருக்கிறார். அதன்பிறகுதான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராகுல் சிங்கை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மோசடியில் தொடர்பு உடைய அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.