யோகி ஆதித்யநாத், மோகன் பகவத்தை கடுமையாக சாடிய வாரணாசி பாடகி ஹர்த் கவுர் மீது தேசதுரோக வழக்கு
லக்னோ: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர் மோகன் பகவத் ஆகியோரை சமூக வலைதளங்களில் கடுமையாக சாடியிருந்த வாரணாசாமி பாடகி ஹர்த் கவுர் மீது தேசதுரோக வழக்கு பாய்ந்துள்ளது.
சமூக வலைதளங்களில் பரபரப்பான பதிவுகளை போட்டு பேசுபொருளானவர் ஹர்த் கவுர். வலதுசாரி சிந்தனைகளுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கொந்தளிப்பவர்.
சர்ச்சைக்குரிய ஹேமந்த் கர்கரே படுகொலை, கவுரி லங்கேஷ் படுகொலைகளை குறிப்பிட்டு கடுமையாக சாடி வந்தார் ஹர்த் கவுர். அண்மையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் படத்தை பதிவிட்டு பயங்கரவாத தாக்குதல்கள் அத்தனைக்குமே காரணமானவர் என விமர்சித்திருந்தார்..
உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் படத்தைப் போட்டு காவிபலாத்காரவாதி என காட்டமாக தாக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து ஹர்த் கவுர் மீது 124 தேசதுரோகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.