அம்மாவை மன்னித்து விடுங்கள் ஜனாதிபதி மாமா.. ஷப்னம் மகன் சிலேட்டில் உருக்கம்
லக்னோ: ஜனாதிபதி மாமா, தயவு செய்து என் அம்மாவை மன்னித்துவிடுங்கள்.. தூக்கு தண்டனை வேண்டாம் என்று '7 கொலை செய்த ஷப்னத்தின் 12 வயது மகன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளான்.
Recommended Video
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதல்முறையாக ஒரு பெண் தூக்கிலிடப்பட உள்ளார். அந்த பெண்ணின் பெயர் ஷப்னம். உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டதைச் சேர்ந்தவர். காதலித்தவரை திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததற்காக தனது பெற்றோர் உள்பட குடும்பத்தினர் ஏழு பேருக்கு பாலில் மயக்க மருந்து கொடுத்து பின்னர் ஒவ்வொருவராக கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார் ஷப்னம்.
இந்த பயங்கர படுகொலைகள் காரணமாக ஷப்னத்திற்கு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவரை தூக்கில் போடுவதற்கான பணிகளை மதுரா சிறை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் தான் ஷப்னத்தின் 12 வயது மகன் குடியரசுத் தலைவருக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளான்.
என்ன செய்தார்
ஷப்னம் குறித்து இப்போது பார்ப்போம். உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டதைச் சேர்ந்தவர் ஷப்னம்.. இவர் சலீம் என்பவரை உயிருக்குயிராக காதலித்து வந்திருக்கிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். ஆனால் வீட்டில் ஷப்னம் வீட்டில் கடும் எதிர்ப்பு அதிகமாக கிளம்பியது.. திருமணத்திற்கு சம்மதிக்கவுமில்லை.
காதலுக்கு எதிர்ப்பால் விபரீதம்
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த காதல் ஜோடி தங்களுக்கு எதிராக இருந்த மொத்த பேரையும் கொலை செய்ய முடிவு செய்தார்கள். கடந்த 2008, ஏப்ரல் 15-ம் தேதி அந்த பயங்கரம் நடந்தது. காதலித்தவரை திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததற்காக தனது பெற்றோர் உள்பட குடும்பத்தினர் ஏழு பேருக்கு பாலில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து பின்னர் ஒவ்வொருவராக கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார் ஷப்னம்.
சிக்கினார் ஷப்னம்
பிஞ்சு குழந்தைகளை கூட விட்டுவைக்காமல் கழுத்தை நெறித்து கொன்றுள்ளார். பிறகு, போலீசில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக, தன்னுடைய வீடு, அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டதாக கதை அளந்துவிட்டார். ஆனால், போலீசார் விசாரணையை கையில் எடுத்ததுமே ஷப்னம் வசமாக சிக்கி கொண்டார்.
கருணை மனு நிராகரிப்பு
இந்த வழக்கில் சலீம், ஷப்னத்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அலகாபாத் உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்து விட்டன. ஷப்னத்தின் கருணை மனுவை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இதையடுத்து அவரை தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகளை மதுரா சிறை நிர்வாகம் செய்து வருகிறது.
ஜனாதிபதி மாமா
இந்நிலையில், பத்திரிகையாளர் சைபி என்பரிடம் வளர்ந்து வரும் ஷப்னத்தின் 12 வயது மகன் தாஜ் முகமது, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு சிலேட்டில், ஜனாதிபதி மாமா, தயவு செய்து என் அம்மாவை மன்னியுங்கள்' என வேண்டுகோள் விடுத்துள்ளான். இந்த கோரிக்கை நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.