குளுகுளு சிம்லா.. ஜில் ஜில் ஷியாமளா ஆகிறது.. பாஜகவின் அடடே சுறுசுறுப்பு!
ஷிம்லா ஷியாமளா என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
Recommended Video
லக்னோ: எல்லா பணிகளையும் குறையின்றி சீரும் சிறப்புமாக செய்து முடித்து விட்ட மத்திய பாஜக அரசு இப்போது மாநிலங்களின் புகழ்பெற்ற நகரங்களின் பெயர் மாற்றத்தை கையில் எடுத்துள்ளது.
பழம்பெருமை வாய்ந்த அலகாத் பிரயாக் ராஜ் என்று மாறிவிட்டது. இதற்கு அடிப்படை காரணம், இது முகலாயர்கள் வைத்த பெயராம். எனவே இந்த பெயர் வேண்டாம் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வந்தவண்ணம் இருந்து, பிறகு பிரயாக்ராஜ் என்று மாறிவிட்டது.
குன்றுகளின் ராணி
இந்த பிரயாக்ராஜ் என்ற பெயர் ரிக்வதம், மகாபாரதம், ராமாயணம் போன்றவற்றில் குறிப்பிடப்படுகிறது. இப்போது குளு குளு சிம்லாவுக்கு பெயர் மாற்றம் நடைபெற்று வருகிறது. காரணம் இங்கவும் பாஜக ஆட்சிதான் நடக்கிறது. 'குன்றுகளின் ராணி' சிம்லா என்ற பெயரை முகலாயர்கள் வைக்கவில்லை. ஷியாமளா என்பது காளிதேவியின் அவதார பெயர்தான். அதனால் இந்த மலைக்கு ஆரம்பத்திலிருந்தே ஷியாமளா என்றுதான் இருந்தது.
ஷிம்லா ஆனது
ஆனால் இந்த பெயர் நம்மை ஆண்ட பிரிட்டிஷார் வாயில் நுழையவே இல்லை. அதனால் ஷியாமளாயாவை ஷிம்லா என தங்கள் வாயில் எப்படி நுழையுமோ அப்படி கூப்பிட்டார்கள். இதுதான் காலப்போக்கில் மக்கள் மனதிலும் நின்றுவிட்டது. ஆனால் மீண்டும் ஷியாமளா என பெயர் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதற்காக இந்து வலதுசாரி குழுக்கள் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் ஆசைப்பட்டால்..
இதற்கு அந்த மாநில சுகாதார அமைச்சர் விபின் சிங், "பழைய பெயரை மாற்றினால் ஒன்றும் தப்பு கிடையாது. ஒருவேளை சிம்லாவை ஷியாமளா என்று அழைக்க மக்கள் ஆசைப்பட்டால் அது பற்றி பரிசீலிக்கப்படும்" என்று சொல்லி இருக்கிறார். பாஜகவின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் தரப்பில் கண்டனம் எழுந்துள்ளது. இப்படி பெயர் மாற்றினால் ஏதாவது நல்லது நடக்குமா, வளர்ச்சி அதிகரிக்குமா? அப்படியென்றால் மாற்றட்டும் என்கிறது.
பிரித்தாளும் சூழ்ச்சி?
முதலில் நகரங்களின் பெயர்களை மாற்றும் நடவடிக்கை எதற்காக என்று தெரியவில்லை. காலங்காலமாக மக்கள் மனசில் ஒட்டிக் கொண்ட பெயரை மாற்ற வேண்டிய நிர்பந்தம், கட்டாயம், அவசியம், நெருக்கடி, என்னவென்றுதான் புரியவில்லை. மதத்தை மனதில் வைத்து அல்லது பண்பாடு மிக்க பெயர்களை மாற்றி அமைப்பதால் கிடைக்கக்கூடிய நன்மை என்ன என்றும் விளங்கவில்லை. இது பிரிவினை அரசியலின் ஒரு வகையாகதான் பார்க்கப்படுகிறது. பிரித்தாளும் சூழ்ச்சியின் வழியாகத்தான் கையாளப்படுகிறது.
குடிநீர் பஞ்சம் என்னானது?
இதே சிம்லாவில் 2 லட்சம் பேர் வசிக்கிறார்கள். குடிக்க கூட அங்கு தண்ணீர் இல்லாத பஞ்சம் நிலவுகிறது. கடந்த மே மாதம், குடிநீர் இல்லாமல் மக்கள், முதலமைச்சர் வீட்டுக்கருகில் போராட்டமும் நடத்தினார்கள். சிம்லாவுக்கு வரும் சுற்றுலாபயணிகளை வர வேண்டாம் என்றுகூட அந்த மாநிலம் கேட்டுக் கொண்டு விளம்பர பலகைகளை வேறு ஆங்காங்கே வைத்தார்கள். இந்த நிலைமை தற்போது சரியாகிவிட்டதா? என்று தெரியவில்லை.
இதுவா முன்னேற்றம்?
அடிப்படை வசதிகளை செய்து தராமல், தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு பெயர் மாற்றம் செய்வது போல, ஊர், நகரங்களுக்கு பெயர் வைப்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. வேண்டுமானால் முறையான, வாக்கெடுப்பு நடத்தி மக்கள் கருத்தை அறிந்து அதன்பின்னர் பெயரை மாற்றலாமே தவிர, ஆட்சி, அதிகாரம் இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக நகரங்களுக்கு பெயரை மாற்றுவது முன்னேற்றத்திற்கான அறிகுறியாக தெரியவில்லை.