உ.பி-யில் அதிர்ச்சி.. மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 32 பேர் பலி.. இழப்பீடு அறிவித்த மாநில அரசு
Recommended Video
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று மின்னல் தாக்கியதில் 32 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அம்மாநில அரசு இழப்பீட்டு தொகை அறிவித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில நாட்களில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் எதிர்பாராத விதமாக உயிரிழந்தவர்கள் தொடர்பாக அம்மாநில அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஜூலை 18 மற்றும் 20 தேதிகளில் 2 பேர் பாம்பு கடியால் உயிரிழந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.
அதே போல சனிக்கிழமையன்று மின்னல் தாக்கிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் மின்னல் தாக்கியதன் காரணமாக, 13 பேர் இதுவரை காயமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதே அறிக்கையில் நேற்று மின்னல் தாக்கிய விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாக உத்தரப்பிரதேச மாநில அரசு கூறியுள்ளது.
அம்மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) மின்னல் தாக்கியதில் கான்பூர் மற்றும் ஃபதேபூரில் தலா 7 பேரும், ஜான்சியில் 5 பேரும் , ஜலாவுனில் 4 பேரும், ஹமீர்பூரில் 3 பேரும், காசிப்பூரில் 2 பேரும் மற்றும் ஜான்பூர், பிரதாப்கர், கான்பூர் தேஹத் மற்றும் சித்ரகூட் ஆகிய இடங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது நேற்று ஒரே நாளில் மட்டும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மின்னல் தாக்கி 32 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை.. தண்ணீர் பிரச்சனை தீரும் என எதிர்பார்ப்பு
மின்னல் தாக்கி 32 பேர் உயிரிழந்துள்ளதற்கு உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆழ்ந்த இரங்கல் மற்றும் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் இறந்தவர்களது குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மின்னல் தாக்கியதில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிப்பதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பணிகளைச் செய்வதிலும் எந்தவித குறைபாடும் இருக்க கூடாது என முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.