திருமண கொண்டாட்டத்தில் போதையில் ஆட்டம்.. டான்ஸை நிறுத்திய இளம் பெண்ணின் முகத்தில் துப்பாக்கிச்சூடு
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் நடந்த திருமண கொண்டாட்டத்தில் நடனமாடிய இளம் பெண், நடனம் ஆடுவதை நிறுத்திய போது திடீரென போதை ஆசாமி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த டிசம்பர் 1ம் தேதி நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனிடையே துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்த இளம் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் கான்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் சித்ரகோட் பகுதியில் சுதிர் சிங் பட்டோல் என்பரின் மகளின் திருமண விழா கடந்த டிசம்பர் 1ம் தேதி நடந்தது. சுதிர் சிங் அந்த கிராமத்து தலைவர் ஆவார்.
திருமண மண்டபம்
இந்நிலையில் சுதிர் சிங்கின் மகளது திருமண விழா ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என சிறப்பாக போய் கொண்டு இருந்தது. மதுபோதையில் சிலர் உற்சாகமாக மேடை நடனத்ததை ரசித்த படி ஆடிக்கொண்டிருந்தனர். அப்போது நடனக்குழுவைச் சேர்ந்த இளம் பெண் மீது திருமண விழா கூட்டத்தில் இருந்து மர்ம நபர் துப்பாகிக்கியால் சுட்டுள்ளார். இதனால் மொத்த திருமண மண்டபம் அதிர்ச்சி அடைந்தது.
கட்டாயம் சுடணும்
இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோவில், மேடையில் சிலபெண்கள் நடனமாடிவிட்டு நின்று கொண்டிருக்கிறார்கள். அப்போது குடிபோதையில் இருந்து நபர் ஒருவர். மேடைக்கு கீழ் நின்றபடி, பெண்கள் நடனமாடுவதை நிறுத்தினால் சுட்டுவிடுவேன் என்கிறார். அப்போது அருகில் இருந்தவர் நீங்கள் கட்டாயம் சுட வேண்டும் என்கிறார்.
அதிர்ச்சி
இதனிடையே யாரும் எதிர்பாராதவிதமாக அந்த பெண்ணின் முகத்தில் துப்பாக்கி குண்டு பாய்கிறது. இதில் அந்த பெண் மயங்கி விழுந்து கீழே சரிகிறார். சுற்றியிருந்த அனைவரும் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
படுகாயம் அடைந்தனர்
இதனிடையே மேடையில் நின்று கொண்டிருந்த மணமகளின் மாமாக்கள் மிதிலேஷ் மற்றும் அகிலேஷ் ஆகியோரும் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தனர். அனைவரையும் அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
கொலை முயற்சி
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கிராமத் தலைவரின் குடும்ப உறுப்பினர் ஒருவரே துப்பாக்கிச்சூடு நடத்தியருப்பதை உறுதி செய்தனர். அந்த நபர் மீது கொலை முயற்சி வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் குற்றவாளியை கைது செய்ய தாங்கள் முயற்சித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நடனகலைஞர் பலி
முன்னதாக கடந்த 2016ல் பஞ்சாபில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் 25 வயது நடனக்கலைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். குல்விந்தர் கவுர் என்ற அந்த கர்ப்பிணி பெண்ணை ஆடிக்கொண்டிருந்த போது வயிற்றிலே துப்பாக்கியால் சுட்டனர். இதில் சம்பவ இடத்திலே அந்த பெண் உயிரிழந்தார்.