"நான் நலம்".. 5 நிமிடம் மட்டும் வழக்கறிஞரிடம் பேசிய சித்திக் கப்பான்..49 நாளாக சிறையில் வாடும் அவலம்
லக்னோ: ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் சித்திக் கப்பான் இரண்டு மாதம் முன் கைது செய்யப்பட்டார். 49 நாட்களாக சிறையில் இருக்கும் இவர் தனது வழக்கறிஞரிடம் பேசுவதற்கு இன்று வெறும் 5 நிமிடம் மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
உத்தர பிரதேசத்தை உலுக்கிய ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்னும் சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. ஹத்ராஸ் மாவட்டத்தில் இருக்கும் பூள்கார்கி கிராமத்தில் 20 வயது பட்டியலின பெண் உயர் சாதி ஆண்கள் 4 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு குறித்து செய்தி சேகரிக்க சென்ற கேரளாவை சேர்ந்த சித்திக் கப்பான் என்ற செய்தியாளர் உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். டெல்லியில் வசித்து வந்த இவர் டெல்லியில் இருக்கும் கேரளா பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவராக இருக்கிறார்.
49 நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்ட சித்திக் கப்பான் இன்னும் சிறையில் இருக்கிறார். இவருக்கு பெயில் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது, ஆனால் இந்த வழக்கில் மத்திய மற்றும் உத்தர பிரதேச அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி கைது செய்யப்பட்ட இவர் மீது தேச விரோத வழக்கு, மத வன்முறையை தூண்டும் வழக்கு என்று பல பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது.
புல்வாமாவில் தீவிரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல்.. 12 பொதுமக்கள் படுகாயம்.. ராணுவம் பதிலடி
49 நாட்களாக சிறையில் வாடும் சித்திக் கப்பானை விடுவிக்க உச்ச நீதிமன்றத்தில் 2 மனுக்கள் தொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் உத்தர பிரதேசத்தில் மதுரா கோர்ட்டில் சித்திக் கப்பானை விடுவிக்க இன்னொரு வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 49 நாட்களாக சிறையில் இருக்கும் சித்திக் கப்பான் இன்றுதான் தனது வழக்கறிஞரிடம் முதல் முறையாக பேசினார். தனது வழக்கறிஞர் வில்ஸ் மேத்யூஸிடம் இவர் 5 நிமிடம் மட்டும் பேச அனுமதிக்கப்பட்டார். தொலைபேசியில் சித்திக் கப்பான் வழக்கறிஞரிடம் பேசினார்.
நான் நலமாக இருக்கிறேன், உணவு கிடைக்கிறது, தேவையான மருந்துகள் கிடைக்கிறது என்று சித்திக் கப்பான் தனது வழக்கறிஞரிடம் குறிப்பிட்டுள்ளார். செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரை இப்படி சிறையில் அடைத்து வைத்து இருப்பதை நாடு முழுக்க இருக்கும் செய்தியாளர்கள் பலர் கடுமையான கண்டித்து உள்ளனர்.