சாதி கலவரத்தை தூண்ட திட்டமிட்டார்.. சித்திக் கப்பான் வழக்கில்.. உ.பி அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதம்
லக்னோ: ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் சித்திக் கப்பான் ஜாதி கலவரத்தை தூண்ட முயற்சித்தார் என்று உத்தர பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
உத்தர பிரதேசத்தை உலுக்கிய ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில் செய்தி சேகரிக்க சென்றதற்காக செய்தியாளர் சித்திக் கப்பான் கைது செய்யப்பட்டார். டெல்லியில் வசித்து வந்த இவர் டெல்லியில் இருக்கும் கேரளா பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவராக இருக்கிறார்.
கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி கைது செய்யப்பட்ட இவர் மீது தேச விரோத வழக்கு, மத வன்முறையை தூண்டும் வழக்கு என்று பல பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது. 51 நாட்களாக சிறையில் வாடும் சித்திக் கப்பானை விடுவிக்க உச்ச நீதிமன்றத்தில் 2 மனுக்கள் தொடுக்கப்பட்டுள்ளது.
உண்மையை திரிக்க வேண்டாம்... பூங்கோதை ஆலடி அருணா தரப்பில் விளக்க அறிக்கை..!
விசாரணை
இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ போட்பே மற்றும் நீதிபதிகள் ஏஎஸ் போபண்ணா, வி ராமசுப்ரமணியம் ஆகியோர் விசாரணை செய்தனர். உத்தரப்பிரதேச அரசு சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜர் ஆனார். டெல்லியில் இருக்கும் கேரளா பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பாக கபில் சிபல் ஆஜர் ஆனார்.
பிரமாண பாத்திரம்
இந்த வழக்கில் இன்று பிரமாண பாத்திரம் தாக்கல் செய்தது உத்தர பிரதேச அரசு. அதில், செய்தியாளர் என்று போர்வையில் ஜாதி கலவரத்தை தூண்டுவதற்காக சித்திக் ஹத்ராஸ் சென்று இருக்கிறார். இவர் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய அமைப்பான பிஎப்ஐ அமைப்பை சேர்ந்தவர். இந்த அமைப்பின் செயலாளராக இவர் இருக்கிறார்.
கைது
உத்தர பிரதேசத்தில் கலவரத்தை தூண்ட வந்தார் என்றுதான் இவர் கைது செய்யப்பட்டார். இவர் முறையின்றி கைது செய்யப்படவில்லை. நீதிமன்ற காவலில்தான் இவர் இருக்கிறார். இவர் தனது உறவினர்களுடன் போனில் பேச மூன்று முறை அனுமதிக்கப்பட்டார். இவரின் செய்தியாளர் அடையாள அட்டை 2018லேயே காலாவதியாகிவிட்டது என்று உத்தர பிரதேச அரசு இந்த வழக்கில் குறிப்பிட்டுள்ளது.
கபில் சிபல்
இந்த நிலையில் பெயில் விண்ணப்பத்தில் சித்திக் கையெழுத்திட வசதியாக அவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று கபில் சிபல் வாதம் செய்தார். சித்திக்கை வழக்கறிஞர் சந்திக்க தடை எதுவும் இல்லை என்று உத்தர பிரதேச அரசு தரப்பு வாதம் வைத்தது. இந்த நிலையில் உத்தர பிரதேச அரசின் பிரமாண பத்திரத்திற்கு பதில் அளிக்கும்படி சித்திக் தரப்பிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹத்ராஸ்
ஹத்ராஸ் மாவட்டத்தில் இருக்கும் பூள்கார்கி கிராமத்தில் 20 வயது பட்டியலின பெண் உயர் சாதி ஆண்கள் 4 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.