சமாஜ்வாதியுடனான கூட்டணி முறிவு தற்காலிமானாதே... மாயாவதி தடாலடி
லக்னோ: சமாஜ்வாதி கட்சியுடனான கூட்டணி முறிவு என்பது தற்காலிகமானதே; அகிலேஷ் யாதவ் சிறப்பாக செயல்பட்டால் மீண்டும் கூட்டணி அமைப்போம் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அதிரடியாக அறிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி- பகுஜன் சமாஜ் கூட்டணி சாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜகவின் விஸ்வரூப வெற்றியை இந்த கூட்டணியால் தடுக்க முடியவில்லை.
இந்நிலையில் லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் மாயாவதி நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, எதிர்வரும் 11 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என முடிவெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் மாயாவதி கூறியுள்ளதாவது:
சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்தது முதல் அகிலேஷ்யாதவும் அவரது அம்னைவி டிம்பிள் யாதவும் என்னிடம் மிகுந்த மரியாதை செலுத்தினர். நாங்கள் மனமாச்சரியங்களை மறந்து தேசத்தின் நலன் கருதி இணைந்து செயல்பட்டோம். அவர்களுக்கும் உரிய மரியாதை அளித்தோம்.
எங்களுக்கிடையேயான உறவு என்பது தேர்தல் அரசியலுடன் முடிவடைவது அல்ல. அதற்கு அப்பாலும் நிச்சயம் தொடரக் கூடியதுதான். இருந்த போதும் அரசியல் ரீதியான சில நெருக்கடிகளை நாம் தவிர்க்க முடியாது.
என்ன ஆச்சு காங்கிரசுக்கு.. ஒன்னும் சரியில்லையே.. வரிசையாக கழன்று ஓடும் காங்கிரஸ் இன்ஜின்கள்
லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் வாக்கு வங்கியான யாதவர்கள் ஓட்டு, பகுஜன் சமாஜ் கட்சிக்கு விழவில்லை. இத்தனைக்கும் சமாஜ்வாதி கட்சியின் முக்கியமான வேட்பாளர்கள் பலரும் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.
சமாஜ்வாதி கட்சி- பகுஜன் சமாஜ் இடையேயான கூட்டணி முறிவு என்பது நிரந்தரமானது அல்ல. இது தற்காலிகமானது. அகிலேஷ் யாதவ் தம் முன்னால் உள்ள சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறவேன்டும். அப்படி அகிலேஷ் யாதவ் வெற்றி பெற்றார் எனில் நாங்கள் மீண்டும் கூட்டணி அமைத்து களம் இறங்குவோம்.
அகிலேஷ் யாதவால் வெல்ல முடியாது போனால் நாங்கள் தனித்தே போட்டியிடுவதுதான் சரியானது. ஆகையால்தான் தற்போது எதிர்வரும் 11 தொகுதி சட்டசபை இடைத் தேர்தல்களில் தனித்து போட்டியிடுவது என முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு மாயாவதி கூறினார்.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவைப் பொறுத்தவரையில் பாஜகவை முழு வீச்சில் எதிர்க்கிறார். ஆனால் அவரது தந்தை முலாயம்சிங் யாதவ் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் பாஜகவை ஆதரிக்கின்றனர்.
தற்போதைய லோக்சபா தேர்தலில் யாதவர் வாக்குகளை அப்படியே பாஜகவுக்கு சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களே மடைமாற்றினர். இதனால்தான் பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி கட்சி படுதோல்வி அடைந்தது. இதைத்தான் அகிலேஷ் யாதவ் முன் நிற்கும் சவால் என மாயாவதி குறிப்பிட்டுச் சொல்கிறார்.