அயோத்தியில் மசூதி.. 25 கிமீ தூரம் தள்ளி வழங்கப்பட்ட நிலத்தை ஏற்றது சன்னி வக்பு வாரியம்
லக்னோ: அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மசூதி கட்டுவதற்கு உத்தரப்பிரதேச அரசு அளித்த ஐந்து ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம் ஏற்றுக்கொண்டுள்ளது.
அயோத்தி வழக்கில் கடந்த ஆண்டு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை இந்துக்களுக்கே சொந்தம் என்றும் அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது. அத்துடன் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்த உச்ச நீதிமன்றம், அதற்கு பதில் அயோத்தியிலேயே ஐந்து ஏக்கர் நிலத்தை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதன்படி உத்தரப்பிரதேச அரசு அயோத்தியில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரம் தள்ளி தன்னிப்பூர் என்ற கிராமத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது.
இந்நிலயில் பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வாக்கை தொடுத்த வழக்கறிஞர்களில் ஒருவரான ஹாஜி மஹ்பூப், மசூதிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலம் அயோத்தியில் இருந்து வெகு தொலைவில் உள்ளது. மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். அருகிலேயே நிலம் ஒதுக்க வேணடும். இல்லாவிட்டால் மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறினார்.
இந்நிலையில் இன்று லக்னோவில் சன்னி முஸ்லீம் மத்திய வக்பு வாரியத்தின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், மசூதி கட்டுவதற்காக உத்தரப்பிரதேச அரசு கொடுத்த ஐந்து ஏக்கர் நிலத்தை ஏற்றுக்கொள்வதென முடிவு செய்யப்பட்டது. . இந்த இடத்தில் டிரஸ்ட் மருத்துவமனை, பொது நூலகம் மற்றும் இந்தோ-இஸ்லாமிய கலாச்சார மையம் ஆகியவையும் கட்டுவதென தீர்மானிக்கப்பட்டது. முக்கியமான இந்த கூட்டத்தில் ஆறு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர், இம்ரான் மபூத் மற்றும் அப்துல் ரசாக் இந்த கூட்டத்தை புறக்கணித்தனர்.