உ.பி. பாஜக தலைவராக சுதந்திரதேவ் சிங் நியமனம்- ஓபிசி வாக்குகளை தக்க வைக்க வியூகம்!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநில பாஜகவின் புதிய தலைவராக சுதந்திரதேவ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். குர்மி சமூகத்தைச் சேர்ந்தவரை தலைவராக நியமித்ததன் மூலம் பிற்படுத்தப்பட்டோர் வாக்குகளை தக்க வைக்க முடியும் என கணக்குப் போடுகிறது பாஜக.
உத்தரப்பிரதேசத்தில் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக இருந்து வருகிறார். அவரது நியமனங்களில் தாக்கூர் சமூகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக பிற சமூகங்களில் அதிருப்தி ஏற்பட்டது.
குறிப்பாக பிராமண சமூகத்தினரிடையே இந்த அதிருப்தி அதிகமாக இருந்தது. இதனால் துணை முதல்வராக இருந்த மகேந்திரநாத் பாண்டேவை பாஜக தலைவராக அறிவித்தது. இது பிராமண சமூகத்தை சமாதானப்படுத்தியது. லோக்சபா தேர்தலிலும் இது எதிரொலித்தது,
லோக்சபா தேர்தலில் மகேந்திரநாத் பாண்டே வெற்றி பெற்று மத்திய அமைச்சரவையில் இடம்பிடித்தார். இதையடுத்து உத்தரப்பிரதேசத்தின் புதிய பாஜக தலைவர் யார் என்கிற கேள்வி எழுந்தது.
தமிழகம் என்னவாகும்?... மேலும் 4 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம்
எம்.எல்.சியாக இருக்கும் லக்ஷ்மண் ஆச்சார்யா அல்லது எம்.பி மகேஷ் சர்மா இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு என கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் குர்மி சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் சுதேந்திரதேவ் சிங், பாஜகவின் உத்தரப்பிரதேச மாநில புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரை நியமித்திருப்பதன் மூலம் பிற்படுத்தப்பட்ட சமூக வாக்குகளைப் தக்க வைக்க முடியும் என்பது பாஜக தலைவர் அமித்ஷாவின் கணக்கு. மேலும் மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவராக பொதுப்பணித்துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார்.