28 ஆண்டுகால பாபர் மசூதி இடிப்பு கிரிமினல் வழக்கு.. லக்னோ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாறிய வரலாறு இது!
லக்னோ: 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான கிரிமினல் வழக்கில் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் இன்று குற்றம்சாட்டப்பட்ட 32 பேரையும் விடுதலை செய்து அதிரடி தீர்ப்பளித்தார்.
1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக 1993-ல் பல வழக்குகள் தொடரப்பட்டன. இதில் 2 வழக்குகள் மிக முக்கியமானவை.
ஒன்று பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் மீதான வழக்கு: 2-வது வழக்கு கரசேவகர்களுக்கு எதிரானது.
அத்வானி, உமாபாரதி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கு- லக்னோ நீதிமன்றம் இன்று தீர்ப்பு!
ரேபரேலி தீர்ப்பு
அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் மீதான வழக்கு உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி சிறப்பு நீதிமன்றத்திலும் கரசேவகர்கள் மீதான வழக்கு லக்னோ சிறப்பு நீதிமன்றத்திலும் நடைபெற்றது. 2001-ல் ரேபரேலி நீதிமன்றம் அத்வானி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இத்தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீது 9 ஆண்டுகள் அலகாபாத் உயர்நீதிமன்ற்த்தில் விசாரணை நடந்தது.
உச்சநீதிமன்றத்தில் அப்பீல்
2010-ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றமும் ரேபரேலி தீர்ப்பை உறுதி செய்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மற்றும் ஹாஜி மெஹபூப் அகமது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை 7 ஆண்டுகாலம் நடைபெற்றது.
லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம்
2017-ம் ஆண்டு ஏப்ரல் 19-ல் நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், ரோஹின்டன் நாரிமன் பெஞ்ச், இவ்வழக்கில் ஒரு அதிரடி தீர்ப்பை அளித்தது. அத்தீர்ப்பில், லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் இந்த வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் இந்த வழக்கு விசாரணை நடைபெறும் என தீர்ப்பளிக்கப்பட்டது.
நீதிபதிக்கு அவகாசங்கள்
மேலும் 2 ஆண்டுகளுக்கு வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பளிக்கவும் உச்சநீதிமன்றம் அப்போது அவகாசம் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. 2019-ம் ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றத்தில் நீதிப்தி சுரேந்திர குமார் யாதவ் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில் வழக்கு விசாரணையை முடிக்க மேலும் 6 மாத அவகாசம் கேட்டிருந்தார்.
நீதிபதி பணிக்காலம் நீட்டிப்பு
இதனை ஏற்ற உச்சநீதிமன்றம் 2019- ஜூலை மாதத்தில் 9 மாத கால அவகாசம் அளித்து உத்தரவிட்டது. இதனிடையே உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் பணிக் காலத்தை தீர்ப்பு வழங்கும் காலம் வரை நீட்டித்து உத்தரப்பிரதேச உத்தரவு பிறப்பித்தது. இதனிடையே உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நீதிபதி எஸ்.கே. யாதவ் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
மீண்டும் அகாசம் தந்த சுப்ரீம் கோர்ட்
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாரிமன், சூர்ய் காந்த் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கடந்த மே 9-ந் தேதியன்று, ஆகஸ்ட் 31-ந் தேதிக்குள் வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்; வழக்கு விசாரணைக்கான இறுதி நீட்டிப்பு இதுதான் என கண்டிப்புடன் கூறி இருந்தனர். பின்னர் கொரோனா லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதை முன்வைத்து மேலும் அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்று செப்டம்பர் 30-ந் தேதிக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றம் அவகாசம் கொடுத்தது.
லக்னோ கோர்ட் தீர்ப்பு
இதனடிப்படையில் இன்று லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற் நீதிபதி சுரேந்திரகுமார் யாதவ், பாபர் மசூதி இடிப்பு தொடர்பான கிரிமினல் வழக்கில் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் மொத்தம் 49 பேர் குற்றம்சாட்டப்பட்டனர். பால்தாக்கரே, அசோக் சிங்கால் உட்பட 17 பேர் விசாரணை காலத்தில் காலமாகிவிட்டனர். இதனால் அத்வானி உள்ளிட்ட 32 பேர் மீதான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட அனைவருமே விடுதலை செய்யப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்ட 32 பேரும் பாபர் மசூதி இடிப்புக்கு முன்கூட்டியே திட்டமிடவில்லை; பாபர் மசூதி இடிக்கப்படும் என்பது அவர்களுக்கு தெரியாது; மேலும் பாபர் மசூதியை இடித்த கரசேவகர்களை இந்த தலைவர்கள் தடுக்க முயற்சித்தனர் என சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேந்திரகுமார் யாதவ் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.