திரிணாமுல் காங். பிரதிநிதிகளை லக்னோ விமான நிலையத்திலேயே சுற்றி வளைத்த போலீஸ்.. பரபரப்பு
லக்னோ: என்.ஆர்.சி மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது உத்தரப்பிரதேசத்தில் போலீஸாரின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்க செல்லும் வழியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் குழுவினை லக்னோ விமான நிலையத்தில் போலீசார் தடுத்து நிறுத்தி அழைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
என்.ஆர்.சி மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் கலவரம்வெடித்தது. இந்த கலவரத்தின் போது போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் .
இதையடுத்து உத்தரப்பிரதேசத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுதற்காக தினேஷ் திரிவேதி, முகமது நதிமுல் ஹக், பிரதிமா மண்டல் மற்றும் அபிர் பிஸ்வாஸ் ஆகியோர் அடங்கிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரநிதிகள் இன்று லக்னோ வந்தது. அவர்களை விமான நிலையத்திலேயே போலீசார் தடுத்து நிறுத்தி அழைத்துச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
லக்னோவுக்குச் சென்று கொண்டிருந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கூறியதாவது: "நாங்கள் விமானத்திலிருந்து இறங்கியவுடன் நாங்கள் காவல்துறையினரால் ஓடுதளத்திலேயே சுற்றி வளைக்கப்பட்டோம் நாங்கள் பஸ்ஸில் ஏறியபோது காவல்துறையினர் அனைவரையும் இறக்கி விட்டனர். எங்களை காவல்துறையினர் ஒரு ஒதுங்கிய இடத்திற்கு அழைத்துச் சென்றனர் ஓடுபாதை. நாங்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டோம்" என்றார்கள்.