பேப்பர் எங்கடா.. ஷூ காலால் மிதித்த காக்கி சட்டைகள்.. அடிக்காதீங்க சார்.. வலிக்குது.. ஷாக் வீடியோ
இளைஞரை தாக்கிய 2 போலீஸ்காரர்கள்.. வைரல் வீடியோ
Recommended Video
லக்னோ: இளைஞர் ஒருவரை 2 போலீசார்கள் எகிறி எகிறி காலால் எட்டி உதைக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இந்தியாவில் மோட்டார் வாகன சட்டம் கடுமையாக்கப்பட்டு உள்ளது. இதன் விதிமுறைகளும் தீவிரமாக்கப்பட்டு, அபராத தொகையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக டிராபிக் போலீசாருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் நிறைய பிரச்சனைகள், தகராறுகள், வாக்குவாதங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கின்றன.
ஒருசிலர் இந்த அபராத தொகையை கேள்விப்பட்டவுடனேயே ஆத்திரத்தில், தங்கள் பைக்கையே கொளுத்தி விட்டு போய்விடுகிறார்கள். இப்படி ஒரு கெடுபிடிதான் உத்திரபிரதேசத்தில் நடந்துள்ளது.
சித்தார்த் நகர் மாவட்டத்தில், ரிங்கு பாண்டே என்பவர் பைக்கில் தன்னுடைய குழந்தையை உட்கார வைத்து ஓட்டி வருகிறார். அப்போது அங்கிருந்த 2 போலீசார், பாண்டேவை நிறுத்தி ஆவணங்களை கேட்டுள்ளனர். ஆவணங்கள் இளைஞரிடம் இல்லை என தெரிகிறது. இதுதான் வாக்குவாதமாக மாறி, தாக்குதல் வரை சென்று விட்டது.
காக்கி சட்டை
இந்த வீடியோ வெளியாகி மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. அந்த வீடியோ 2 நிமிடத்துக்கும் மேலாக ஓடுகிறது. 2 போலீசாரும் அந்த இளைஞரை இழுத்து சாலையின் நடுவே போடுகிறார்கள். ஒருவர் காலால் எட்டி உதைக்கிறார்.. இன்னொருவர் சட்டையை பிடித்து சரமாரி தாக்குகிறார். சுற்றிலும் மக்கள் வேடிக்கை பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். முக்கியமாக அந்த இளைஞரின் குழந்தையும் தந்தை அடிவாங்குவதை மலங்க மலங்க பார்த்து கண்ணீருடன் நிற்கிறது.
அடிக்காதீங்க
புரட்டி புரட்டி அடிக்கும் போலீசாரிடம், "நான் என்ன தப்பு பண்ணேன்? நான் தப்பு பண்ணா, என்னை ஜெயில்ல போடுங்க. ஏன் அடிக்கிறீங்க.. அடிக்காதீங்க... நான் வேணும்னா வீட்டுக்கு போய் டாக்குமெண்ஸை எடுத்துட்டு வந்துடறேன்.." என்று வலி தாங்க முடியாமல் கதறுகிறார்.
வண்டி சாவி
ஆனால் அவரது பேச்சு 2 காக்கி சட்டைகளின் காதுகளில் ஏறவே இல்லை. ஷூ கால்களால் முதுகில் உதைக்கிறார்கள் இருவரும், ஒருவர் மாறி ஒருவர்.. தாக்கி கொண்டே இருக்கிறார்கள். கண்மூடித்தனமாக அடித்து ஒருவழியாக முடிந்ததும்,வண்டி சாவியை போலீசார் கேட்க, "நான் என்ன தப்பு செய்தேன்னு சொல்லுங்க.. அதுக்கப்பறம் வண்டி சாவி தரேன்" என்கிறார் அந்த இளைஞர்.
சஸ்பெண்ட்
"ஆவணங்கள் இளைஞரிடம் இல்லை, குடிபோதையில் வந்தார்.. அதனால்தான் தாக்கினோம்" என்று 2 போலீசார்கள் விளக்கம் சொன்னாலும், இந்த வீடியோவை பார்க்கும் அனைவருக்குமே நடுக்கம் வந்துவிடுகிறது. பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்ததை அடுத்து, இது சம்பந்தமான விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் வீரேந்திர மிஸ்ரா, தலைமை கான்ஸ்டபிள் மகேந்திர பிரசாத் 2 பேரும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
விதிகளை மீறிய ஒரே குற்றத்துக்காக, 2 போலீஸ்காரர்களும் இளைஞரை அடித்து உதைத்து துன்புறுத்திய இந்த வீடியோவின் சலசலப்பு இன்னும் அடங்கவில்லை.