உ.பி யில் பதுங்கல்... ஜெய்ஷ் -இ -முகமது இயக்க தீவிரவாதிகள் இருவர் கைது
லக்னோ: ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், உத்தர பிரதேசத்தில் ஜெய்ஷ் - இ- முகமது தீவிரவாதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அம்மாநில காவல்துறை அதிகாரி ஓ.பி.சிங் பேசுகையில்: சஹரன்பூரில் நடந்த தேடுதல் வேட்டையில் தீவிரவாத தடுப்பு பிரிவினர் 2 தீவிரவாதிகளை கைது செய்துள்ளனர். இருவரும் ஜெய்ஷ் -இ -முகமது இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்பதும், காஷ்மீரை சேர்ந்தவர்கள் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட காஷ்மீரி இளைஞர்களில் ஒருவரான ஷா நவாஸ் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அக்விப் தாக்குதல் நடத்தப்பட்ட புல்வாமா மாவட்டத்தையும் சேர்ந்தவர் ஆவார். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இருவரும் உத்தர பிரதேசம் வந்ததற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக கூறினார்.
இதற்கிடையே, கேரளா மாநிலம் மலபார் நகரில் உள்ள அரசு கல்லூரி வளாகத்தில், 'காஷ்மீர் சுதந்திரம்' என்று கூறி, சுவரொட்டிகள் ஒட்டிய முகமது ரின்ஷத் மற்றும் முகமது ஃபரிஸ் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.