'ஆக்சிஜன் இல்ல.. கூட்டிட்டுப் போங்க' - உறவினர்களை 'கலங்க' வைத்த உ.பி. மருத்துவமனைகள்
லக்னோ: இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை சுனாமி அலைகளை விட கொடூரமாக உள்ளது. மக்கள் கொத்து கொத்தாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் சூழலில், இப்படியொரு கொடுமை உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
தீவிரமான கொரோனா பரவல் காரணமாக, பாதிக்கப்படுபவர்களில் பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. அவர்களால் மூச்சை ஆழமாக இழுக்க முடியாது.
அப்படிப்பட்டவர்களுக்கு கண்டிப்பாக ஆக்சிஜன் வழங்க வேண்டும். முதியவர்கள் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இணை நோய்கள் உள்ளவர்கள் மட்டுமல்ல, இளைஞர்களுக்கு கூட இதுபோன்ற மூச்சுத்திணறல் சர்வசாதாரணமாக ஏற்படுகிறது.
வெரி குட் நியூஸ்.. தடுப்பூசி பெற்றவர்களுக்கு கொரோனா வருவது மிகக்குறைவாம்.. தரவுகளை நீங்களே பாருங்க!
என்ன நடக்கிறது உ.பி.யில்?
இந்த நிலையில் தான் உ.பி. தலைநகர் லக்னோவில் இரண்டு தனியார் மருத்துவமனைகள் அதிர்ச்சி தரும் அறிக்கையை வெளியிட்டுள்ளன. அங்குள்ள மாயோ மெடிக்கல் சென்டர், மேக்வெல் மருத்துவமனை ஆகியவற்றில் பல்வேறு கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அழைச்சிட்டுப் போங்க
இந்த சூழலில், அவ்விரு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அங்கு சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றிக் கொள்ளுமாறு அவர்களது உறவினர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தயவு கூர்ந்து மன்னிக்கவும்
இதுகுறித்து மாயோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், "உ.பி. முதல்வர் / மத்திய அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்த பிறகும், எங்களுக்கு போதுமான ஆக்சிஜன் சப்ளை கிடைக்கவில்லை. ஆக்சிஜன் சப்போர்ட்டுடன் உள்ள நோயாளிகளை, தயவுசெய்து வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு, குடும்ப உறுப்பினர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். சிரமத்திற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம்." என்று குறிப்பிட்டுள்ளனர்.
10 - 15 நபர்கள்
டாக்டர்களின் பரிந்துரை மற்றும் ஆதார் அட்டைகளை வைத்திருந்தால் மட்டுமே மக்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். அங்குள்ள மருத்துவமனைகளில் கடந்த சில நாட்களில் மட்டும் 10 - 15 நபர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.