பாலியல் புகார் கூறிய பெண் மீது கொலை முயற்சி.. பாஜக எம்எல்ஏ குல்தீப் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு
லக்னோ: பாலியல் புகார் கூறிய உன்னவ் பெண் மீது கொலை முயற்சி செய்ததாக பாஜக எம்எல்ஏ குல்தீப் சீன்கர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்ய மாநில அரசு பரிந்துரைத்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநில உன்னவ் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு பாஜக எம்எல்ஏ குல்தீப் சீன்கர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்திருந்தார். அந்த பெண் தனக்கு 16 வயதாக இருந்த போது வேலை கேட்க குல்தீப்பின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது அவரை குல்தீப், பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் தனது புகாரில் கூறியுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக புகார் அளித்தும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.
ரே பரேலி
இதையடுத்து அந்த பெண், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீடு முன் தர்ணா போராட்டம் நடத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த பெண் தனது இரு உறவினர்கள், வழக்கறிஞர் மகேந்திர சிங்குடன் காரில் ரே பரேலிக்கு சென்று கொண்டிருந்தார்.
இருவர்
அப்போது அவரின் கார் மீது லால்கஞ்ச் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று மோதியது. இந்த விபத்தில் இரு உறவினர்களும் இறந்துவிட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணும், வழக்கறிஞரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த பிரச்சினை நேற்று நாடாளுமன்றத்தில் வெடித்தது. இது திட்டமிட்ட சதி என உறவினர்களும் தெரிவித்தனர்.
குற்றவாளி
இந்த விபத்து சம்பவத்தில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சீன்கர் உள்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசுக்கு பரிந்துரை
இந்த விவகாரம் பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் மீதான விசாரணையை சிபிஐ மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரப்பிரதேச அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனால் இந்த வழக்கு இன்னும் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.