உன்னாவ் பலாத்கார சம்பவம்.. உ.பி. அமைச்சரின் மருமகன் மீது சிபிஐ வழக்குப் பதிவு
லக்னோ: உன்னாவ் பலாத்கார சம்பவம் தொடர்பாக உ.பி. அமைச்சர் ரவீந்திர சிங்கின் மருமகன் அருண் சிங் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநில உன்னாவ் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு பாஜக எம்எல்ஏ குல்தீப் சீன்கர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்திருந்தார். அந்த பெண் தனக்கு 16 வயதாக இருந்த போது வேலை கேட்க குல்தீப்பின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அப்போது அவரை குல்தீப், பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் தனது புகாரில் கூறியுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக புகார் அளித்தும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து அந்த பெண், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீடு முன் தர்ணா போராட்டம் நடத்தினார். இதன் மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த நிலையில் அந்த பெண் தனது இரு உறவினர்கள், வழக்கறிஞர் மகேந்திர சிங்குடன் காரில் ரே பரேலிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரின் கார் மீது லால்கஞ்ச் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று மோதியது. இந்த விபத்தில் இரு உறவினர்களும் இறந்துவிட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணும், வழக்கறிஞரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது திட்டமிட்ட சதி என உறவினர்களும் தெரிவித்தனர்.
இந்த விபத்து சம்பவத்தில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சீன்கர் உள்பட 10 மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் குல்தீப் சீன்கரை கட்சியிலிருந்து பாஜக நீக்கியது.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, அமைச்சர் ரவீந்திர சிங்கின் மருமகன் அருண் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் உன்னாவ் பெண் தனது உயிருக்கு ஆபத்து என கூறி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தை ஏன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை என செக்ரட்டரி ஜெனரலிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நாளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விசாரணை நடத்துகிறார்.