கொலை மிரட்டல் குறித்து புகார் அளித்தோம்.. யோகி ஆதித்யநாத் கண்டுகொள்ளவில்லை.. உன்னாவ் பெண் குடும்பம்
லக்னோ: கடந்த சில மாதங்களாக தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக முதல்வர் அலுவலகத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என உன்னாவ் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநில உன்னாவ் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு பாஜக எம்எல்ஏ குல்தீப் சீன்கர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்திருந்தார். அந்த பெண் தனக்கு 16 வயதாக இருந்த போது வேலை கேட்க குல்தீப்பின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அப்போது அவரை குல்தீப், பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் தனது புகாரில் கூறியுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக புகார் அளித்தும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.
ரே பரேலி
இந்த நிலையில் சிறையில் உள்ள தனது மாமாவை பார்ப்பதற்காக கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தனது உறவினர்கள் இருவர், வழக்கறிஞர் ஆகியோருடன் அந்த பெண் காரில் ரே பரேலிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கார் மீது லாரி மோதியது.
சிபிஐ விசாரணை
இந்த விபத்தில் இரு உறவினர்களும் பலியாகிவிட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் பாதிக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டுள்ளார். வழக்கறிஞருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
மிரட்டல்
இந்த விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை முயற்சி என பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில் கடந்த பல மாதங்களாக எங்கள் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வந்தது.
10 பேர் சிறையில்
இதுகுறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலகத்தில் நேரடியாக புகார் அளித்தோம். ஆனால் பல முறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை. இதனால் தற்போது எங்கள் வீட்டு பெண் சென்ற வாகனம் மீது திட்டமிட்டே லாரியை விட்டு மோத வைத்துள்ளனர் என குடும்பத்தினர் தெரிவித்தனர். விபத்துக்கு பின்னர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட குல்தீப் சீன்கர் மற்றும் 9 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.