எனது சகோதரியின் உடலை புதைக்கத்தான் முடியும்.. எரிக்க எதுவும் இல்லை.. உன்னவ் பெண்ணின் சகோதரன்
லக்னோ: எனது சகோதரியின் உடலை புதைக்கத்தான் முடியும். எரிப்பதற்கு ஒன்றுமே இல்லை என உன்னவ் பெண்ணின் சகோதரன் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னவ் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை சிவம், சுபம் திரிவேதி ஆகிய இருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.
அவருக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்து வந்த நிலையில் அந்த பெண்ணின் புகாரின்பேரிலும் நீதிமன்ற உத்தரவின் பேரிலும் சிவம் கைது செய்யப்பட்டார். சுபம் தலைமறைவாகிவிட்டார். இந்தநிலையில் சிவம் ஜாமீனில் வெளியே வந்தார்.
சிவம், சுபம்
அப்போது ரே பரேலியில் உள்ள நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக அந்த பெண் அதிகாலை 4 மணிக்கு ரயில் நிலையத்திற்கு சென்றிருந்தார். அப்போது ரயில் நிலையத்துக்கு வந்த சிவம், சுபம் உள்பட 5 பேர் அந்த பெண்ணை கடுமையாக தாக்கினர்.
லக்னோ
பின்னர் அவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இதில் பலத்த தீக்காயங்களுடன் அந்த பெண் லக்னோவிலிருந்து டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்றிரவு உயிரிழந்தார்.
தூக்கிலிட வேண்டும்
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணின் சகோதரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் என் சகோதரியின் வாழ்க்கையை நாசமாக்கியவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும்.
உடம்பில் ஒன்றுமே இல்லை
இவர்கள் உயிருடன் இருக்கக் கூடாது. அவர்கள் தூக்கில் தொங்குவதை காண்பதற்காகவே நான் வாழ விரும்புகிறேன். எனது சகோதரியின் உடலை அடக்கம்தான் செய்ய முடியும். எரிப்பதற்கு அவர் உடம்பில் ஒன்றுமே இல்லை என கண்ணீர் மல்க தெரிவித்தார்.