பாஜக எம்எல்ஏ மீது பாலியல் புகார் கூறிய பெண்ணின் கார் மீது லாரி மோதல்.. இருவர் பலி
லக்னோ: பாஜக எம்எல்ஏ மீது பாலியல் புகார் கூறிய பெண்ணின் கார் விபத்தில் சிக்கியதில் அவரது உறவினர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்ரபை ஏற்படுத்தியது.
உத்தரப்பிரதேசம் மாநில உன்னவ் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு பாஜக எம்எல்ஏ குல்தீப் சீன்கர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்திருந்தார். அந்த பெண் தனக்கு 16 வயதாக இருந்த போது வேலை கேட்க குல்தீப்பின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது அவரை குல்தீப், பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் தனது புகாரில் கூறியுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக புகார் அளித்தும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.
போராட்டம்
இதையடுத்து அந்த பெண், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீடு முன் தர்ணா போராட்டம் நடத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த பெண் தனது தாய், வழக்கறிஞர் மகேந்திர சிங் மற்றும் உறவினருடன் காரில் ரே பரேலிக்கு சென்று கொண்டிருந்தார்.
மருத்துவமனை
அப்போது அவரின் கார் மீது லால்கஞ்ச் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று மோதியது. இந்த விபத்தில் அந்த பெண்ணின் தாயும், உறவினரும் இறந்துவிட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணும், வழக்கறிஞரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
உயிரிழந்தார்
ஏற்கெனவே அந்த பெண்ணின் தந்தை கடந்த 2018-ஆம் ஆண்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் போது உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லாரி பறிமுதல்
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி கூறுகையில், இந்த விபத்து திட்டமிட்ட சதியாகும். சாலை விபத்து போல் ஏற்படுத்தி அதில் என் சகோதரியை கொல்ல சதி திட்டம் தீட்டியுள்ளனர் என்றார். இதுகுறித்து போலீஸார் கூறுகையில் லாரியை பறிமுதல் செய்துவிட்டோம்.
|
விசாரணை
அதன் டிரைவரையும் கைது செய்துவிட்டோம். இன்னும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. டிரைவரிடம் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.