சுவற்றில் உச்சா போன நபரை தட்டிக்கேட்ட பெண்கள் கார் ஏற்றிக்கொலை - உத்தரபிரதேச பயங்கரம்
உத்தரபிரதேச மாநிலத்தில் சாதாரண சண்டை கொலையில் முடிந்துள்ளது. சுவற்றில் யூரின் போன விசயம் சண்டையாகி கடைசியில் கொலையில் முடிந்துள்ளது. இரண்டு பெண்கள் மீது கார் ஏற்றி கொடூரமாக கொலை செய்துள்ளான்.
லக்னோ: சுவற்றில் யூரின் போன நபரை தட்டிக்கேட்ட பெண்கள் மீது கார் ஏற்றி கொடூரமாக கொலை செய்துள்ளான் ஒரு கொடியவன். அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பெண்களின் பெயர்கள் சாந்தோ தேவி, ஊர்மிளா என்பதாகும். புலந்த்சர் மாவட்டத்தில் குடும்பத்தோடு வசித்து வந்த இவர்களுக்கு நகுல் சிங் ரூபத்தில் எமன் எட்டிப்பார்த்தான்.
திங்கட்கிழமையன்று திருமண விஷேசத்திற்கு போய் விட்டு திரும்பி வந்த போது வீட்டு சுவற்றில் நகுல் சிங் யூரின் போவதை பார்த்து விட்டு ரம்வீர், பீம்சென் ஆகியோர் சத்தம் போட்டுள்ளனர். அப்போது நகுல்சிங் பதிலுக்கு திட்டியிருக்கிறான். இதற்கு சாந்தோ தேவியும், ஊர்மிளாவும் திட்டவே கோபம் கொண்ட நகுல்சிங் உங்களை விட்டேனா பார் என்று எச்சரித்துவிட்டு போனான்.
அது சாதாரண மிரட்டல்தான் என்று நினைத்துக்கொண்டு வழக்கம் போல வேலையை கவனிக்க போய்விட்டனர். ஆனால் நகுல் சிங் தனது நான்கு நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு காரில் திரும்ப வந்தான். வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த பெண்கள் மீது கார் டயரை ஏற்றி நசுக்கினான். இதில் இரண்டு பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ரம்வீரின் மகன் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இரண்டு பெண்களின் சடலங்களையும் சாலையில் கிடத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் கூறி அவர்கள் போராடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளி நகுல்சிங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தப்பி ஓடிய நால்வரை போலீசார் தேடி வருகின்றனர்.