உன்னாவ்: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட 3 போலீசார் சஸ்பென்ட்
லக்னோ: உன்னாவ் எம்.எல்.ஏ. குல்தீப்சிங்கால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த 3 போலீசாரை உத்தரப்பிரதேச அரசு அதிரடியாக சஸ்பென்ட் செய்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் தொகுதி எம்.எல்.ஏ. குல்தீப்சிங், இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கை சிபிஐ விசாரித்த போதும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் அப்பெண்ணையும் படுகொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த விவகாரம் தேசத்தையே உலுக்கியுள்ளது. தமக்கு பாதுகாப்பு கோரி 30க்கும் மேற்பட்ட கடிதங்களை அப்பெண் எழுதியும் உத்தரப்பிரதேச பாஜக அரசு கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்தது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் அப்பெண் பாதுகாப்பு கோரி கடிதம் அனுப்பினார். ஆனால் அந்த கடிதம் தலைமை நீதிபதிக்கு சென்றடையவில்லை. இது தொடர்பாக உச்சநீதிமன்ற பதிவாளர் ஒரு வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் பெண்ணின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த 3 போலீசாரை உத்தரப்பிரதேச அரசு இன்று அதிரடியாக டிஸ்மிஸ் செய்துள்ளது.