38-37 டீல் முடிந்தது.. பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணி உறுதியானது.. உ.பியில் உருவானது மாஸ் டீம்!
உத்தர பிரதேசத்தில் லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதி கட்சி 37 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்களிலும் கூட்டணி அமைத்து போட்டியிட இருக்கிறது.
லக்னோ: உத்தர பிரதேசத்தில் லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதி கட்சி 37 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்களிலும் கூட்டணி அமைத்து போட்டியிட இருக்கிறது.
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடக்க உள்ளது. இதற்காக இப்போதே கட்சிகள் தயாராகி வருகிறது. இந்த தேர்தலில் உத்தர பிரதேசம் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
உத்தர பிரதேசத்தில் மொத்தம் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளது. இங்கு அதிக இடங்களில் வெற்றி பெறும் கட்சி மத்தியில் எளிதாக ஆட்சி அமைக்க முடியும். இந்த 80 தொகுதிகளை கைப்பற்றவே அனைத்து கட்சிகளும் துடித்துக் கொண்டு இருக்கிறது.
இறுதி முடிவு
கூட்டணி இறுதி உடன்படிக்கையின்படி உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 37 இடங்களில் போட்டியிட உள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்களில் போட்டியிட இருக்கிறது. மொத்தமுள்ள 80 இடங்களில், 72 இடங்களில் மொத்தம் இந்த இரண்டு கட்சிகளும் போட்டியிட இருக்கிறது. எந்த கட்சி எங்கு போட்டியிடும் என்று தொகுதிகள் தற்போது ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
மீதமுள்ள இடங்கள்
மீதமுள்ள 5 இடங்களில் 3 இடங்கள் அஜித் சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம் கட்சிக்கு அளிக்கப்பட உள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பாக நேரு குடும்பத்தினர் எப்போதும் போட்டியிடும் தொகுதியான ரேபரேலி, அமேதி தொகுதிகளில் இரண்டு கட்சிகளும் போட்டியிட போவதில்லை என்று முடிவெடுத்து இருக்கிறது. மரியாதை காரணமாக பகுஜன்சமாஜ் - சமாஜ்வாதி இந்த முடிவை எடுத்துள்ளது.
முக்கியம்
இதில் சமாஜ்வாதி கட்சிதான் பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் வேட்பாளரை நிறுத்த போகிறது. அதேபோல் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் முன்னாள் எம்.பி தொகுதியான கோரக்பூரிலும் சமாஜ்வாதி கட்சியே போட்டியிட உள்ளது. மீதம் இருக்கும் முக்கிய இடங்களில் பகுஜன் சமாஜ் போட்டியிடுகிறது.
மோசம்
இந்த கூட்டணி முழுக்க முழுக்க இறுதியாகிவிட்டதால், இனி இதில் காங்கிரஸ் வருவதற்கு வாய்ப்பே இல்லை. இதில் காங்கிரஸ் கட்சி எப்படியாவது இணையும் என்று வெளியான செய்திகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி காங்கிரஸ், பாஜக ஆகிய தேசிய கட்சிகளுக்கு பெரிய போட்டியாக இருக்கும்.