உ.பி. சட்டசபை தேர்தல்: முதல்வர் வேட்பாளராக பிரியங்கா காந்தி? உயிர்த்தெழுமா காங்கிரஸ்?
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக பிரியங்கா காந்தியை நிறுத்த வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. அதேநேரத்தில் பிரியங்கா காந்திதான் இது தொடர்பாக இறுதி முடிவெடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) ஆட்சியைத் தக்க வைப்பதில் தீவிரமாக உள்ளது.
சிவகங்கை பாஜக நிர்வாகி கொலையில் 3 பேர் கைது.. பின்னணியில் 2012 ஆம் ஆண்டு நடந்த சம்பவம்!
ஆனால் பா.ஜ.க. அரசு மீதான அதிருப்தியை அறுவடை செய்து மீண்டும் ஆட்சியை பிடிப்பதில் சமாஜ்வாதி கட்சி கவனமாக காய்நகர்த்துகிறது. இதற்கான கூட்டணிகள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்.
போராடும் காங்கிரஸ்
அதேபோல் பகுஜன் சமாஜ் கட்சியும் இழந்த செல்வாக்கை எப்படியாவது மீண்டும் பெற முடியுமா என பார்க்கிறது. இந்த 3 கட்சிகளுக்குப் பின்னால் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. ஒருகாலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்தது உ.பி. இப்போது சிங்கிள் டிஜிட் இடங்களுக்கே போராடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
முதல்வர் வேட்பாளராக பிரியங்கா?
காங்கிரஸின் பாரம்பரிய தொகுதிகள் பலவும் பாஜகவின் கோட்டைகளாகவே மாறிப் போய்விட்டன. இதனால் காங்கிரஸ் கட்சியை உயிர்ப்பித்தாக வேண்டிய நெருக்கடி இருக்கிறது. தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக பிரியங்கா காந்தியை முன்னிறுத்தினாலாவது கட்சியை உயிர்ப்பிக்க முடியுமா? என்கிற கருத்து பரவலாக அக்கட்சியில் இருக்கிறது.
பிரியங்கா தலைமையில் தேர்தல்
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மூத்த காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித், உ.பி. தேர்தலில் பிரியங்கா காந்தி தலைமையில்தான் காங்கிரஸ் களம் காணப் போகிறது. அதேநேரத்தில் முதல்வர் வேட்பாளராக தம்மை முன்னிறுத்துவது என்பது பிரியங்கா காந்தியின் கையில்தான் உள்ளது. முதல்வர் வேட்பாளர் குறித்து பிரியங்கா காந்திதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றார். மேலும் உ.பி. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தலைவர் இருக்கிறார். அதனால் புதிய தலைவர் நியமிக்கப்பட வேண்டியது இல்லை. தற்போதைய மாநில தலைமை மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. பிற மாநிலங்களில் இருந்து வந்து உ.பி. காங்கிரஸை வழிநடத்துவதில் எங்களுக்கு உடன்பாடும் இல்லை என்றும் சல்மான் குர்ஷித் கூறியிருக்கிறார்.
தேசிய தலைவராக ராகுல்- தீர்மானம்
இதனிடையே காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என அக்கட்சியின் சமூக ஊடகங்கள் பிரிவு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இதேபோன்ற ஒருதீர்மானத்தை ஏற்கனவே டெல்லி பிரதேச மகிளா காங்கிரஸ் பிரிவும் நிறைவேற்றி இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக சோனியா காந்திதான் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக இருந்து வருகிறார். தேசிய கட்சிக்கு ஒரு நிரந்தர தலைவரை போட முடியாத சூழ்நிலை பல்வேறு விமர்சனங்களை உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.