உ.பி. சட்டசபை தேர்தல்: காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளுடன் சமாஜ்வாதி கூட்டணி கிடையாது- அகிலேஷ் கறார்
லக்னோ: உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கான தேர்தலில் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளுடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி அமைக்காது என்று அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள கட்சிகள் இப்போதே தீவிரம் காட்ட தொடங்கிவிட்டன.
உ.பி.யில் பாஜக எளிதாக வெல்ல முடியாத நிலை இருப்பதாக அந்த கட்சியே கருதுகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பல்வேறு நிலைப்பாடுகள் உ.பி.யில் பிராமணர்கள் உள்ளிட்ட பல சமூகங்களில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றன.
பாஜக வியூகம்
இதனால் அதிருப்தியில் உள்ள பிராமணர்கள் உள்ளிட்ட ஜாதியினரை சமாதானப்படுத்துகிற நடவடிக்கைகளை தீவிரமாக பாஜக மேற்கொண்டு வருகிறது. அண்மையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஜிதின் பிரசாதாவை பாஜகவுக்கு தூக்கி வந்ததும் இதற்காகத்தான்.
சிறுபான்மை வாக்குகள் டார்கெட்
இதேபோல் காங்கிரஸ், பகுஜன்சமாஜ், சமாஜ்வாதி கட்சிகளும் தேர்தல் பணிகளில் குதித்துவிட்டன. சிறுபான்மையினர் வாக்குகளை தக்க வைக்க இந்த கட்சிகள் படுதீவிரமாக இறங்கி உள்ளன. முஸ்லிம் வாக்குகளுக்காக உலமாக்களுடன் இணையவழி ஆலோசனை கூட்டத்தை காங்கிரஸ் நடத்தி இருந்தது.
உ.பி. பாஜக அரசு மீது பாய்ச்சல்
இந்த நிலையில் இந்தியா டுடே டிவி சேனலுக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அகிலேஷ் யாதவ் கூறியிருப்பதாவது: உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். மக்களிடம் பணப்புழக்கம் இல்லை. விவசாயிகள் நிலைமை மிக மோசமாக உள்ளது. இதனால் பாஜகவுக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்ட தயாராக மக்கள் இருக்கின்றனர்.
கொரோனாவில் பேரவலம்
கொரோனா பாதிப்பின் போது ஆக்சிஜன் இல்லாமலும் படுக்கைகள் கிடைக்காமலு மக்கள் பரிதவித்து மாண்டு போனதை இந்த நாடு பார்த்தது. அந்த அளவுக்கு உத்தரப்பிரதேச பாஜக அரசு செயல்பட முடியாத அரசாக இருந்தது. முந்தைய சமாஜ்வாதி அரசு காலத்தின் கட்டமைப்புகளைத்தான் பாஜக அரசால் பயன்படுத்தவும் முடிந்தது.
பெரிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை
உத்தரப்பிரதேச தேர்தலில் பெரிய கட்சிகளுடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடாது. தேர்தலில் சிறிய கட்சிகள் சிலவற்றுடன் இணைந்துதான் சமாஜ்வாதி கட்சி தேர்தலை எதிர்கொள்ளும். உத்தரப்பிரதேச மக்களுக்கு எந்த கட்சி நல்லது செய்யும் என்பது நன்றாகவே தெரியும். இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.