உ.பி.யில் காங். புது வியூகம்... முதல்வர் வேட்பாளராக பிராமணரை அறிவிக்க திட்டம்- பாஜகவுக்கு நெருக்கடி
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பிராமணர்கள் நலன்களைப் பாதுகாப்போம்! பிராமணரையே முதல்வர் வேட்பாளராக அறிவிப்போம் என களத்தில் இறங்கியுள்ளது காங்கிரஸ்.
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பெரும்பான்மை ஜாதியினருக்கு பதில் சிறுபான்மை ஜாதியை சேர்ந்தவர்களை முதல்வராக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறது பாஜக. ஆனால் பாஜகவின் இந்த பாலிசி தேர்தல் நேரத்தில் படுமோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது.
இலங்கை: ராஜபக்சே குடும்பத்தின் 5 பேர் அமைச்சர்கள்! டக்ளஸ் உள்ளிட்ட 4 தமிழர்களுக்கும் பதவி!!
பிராமணர் அதிருப்தி
உத்தரப்பிரதேசத்தில் 2017 சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. உத்தரப்பிரதேசத்தில் வழக்கமாக பிராமணர் ஒருவர்தான் முதல்வராக்கப்படுவர். ஆனால் பிராமணர் அல்லாத யோகி ஆதித்த்யநாத்தை (தாக்கூர் ஜாதி) முதல்வராக்கியது பாஜக. இதனால் பிராமணர் சமூகம் கடும் கொந்தளிப்பை வெளிப்படுத்தியது.
காங்கிரஸை நிராகரித்த பிராமணர்கள்
உ.பி.யில் நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல் எதுவாகிலும் பிராமணர் வாக்கு வங்கியை சமாளிக்க ஏதேனும் ஒன்றை செய்து சமாளிக்கிறது பாஜக. இன்னொரு பக்கம் 6 பிராமணர்களை முதல்வராக்கிய காங்கிரஸ் கட்சியை அம்மாநில மக்கள் முற்று முழுதாக நிராகரித்துவிட்டனர். இதற்கு காரணமே சமாஜ்வாதி கட்சியுடனான கூட்டணிதான் என அக்கட்சி என நம்புகிறது.
பிராமணர் நலனே பிரதானம்
இதனாலேயே இனிவரும் தேர்தல்களில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணியே கிடையாது என பகிரங்கமாக காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. அத்துடன் உத்தரப்பிரதேச பாஜக ஆட்சியில் பிராமணர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர்; பிராமணர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி யாத்திரையையும் நடத்துகிறது காங்கிரஸ் கட்சி. இப்போது பிராமணர் நலனையே முன்னிறுத்துவதை வியூகமாக வைத்திருக்கிறது காங்கிரஸ்.
முதல்வர் வேட்பாளராக பிராமணர்
அத்துடன் 2022-ல் நடைபெறும் உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பிராமணர் ஒருவர்தான் முதல்வர் வேட்பாளர் என்கிறது காங்கிரஸ். போகிற போக்கில் பிரமாணர் ஒருவரை முதல்வர் வேட்பாளராகவே அறிவித்து பிரசாரத்தை இப்போதே காங்கிரஸ் தொடங்கிவிடும் எனவும் கூறப்படுகிறது. தேர்தல் வியூக வல்லுநர் பிரஷாந்த் கிஷோரின் ஆலோசனைப்படிதான் காங்கிரஸ் இத்தகைய காய்நகர்த்தல்களை மேற்கொள்கிறது என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.